ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக மகசின் சிறைச்சாலையின் மருத்துவர் ஒருவர் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
மருத்துவரை உயிருடன் இல்லாமல் செய்வது தனக்கு சாத்தியமான விடயம் என ரிசாத் பதியுதீன் தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் வீதியில் வாகனத்தில் பயணித்தால் என்னை சாம்பலாக்குவதற்கு ஒரிரு நிமிடங்கள் போதும் என ரிசாத் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
நான் அவ்வாறு உயிரிழக்க நேரிட்டால் எனது மனைவி கணவரையும், குழந்தைகள் தந்தையையும் இழக்கநேரிடும் எனவும் ரிசாத் பதியுதீன் எச்சரித்தார்.
ஆகஸ்ட் 15 ம் திகதி சிறைச்சாலையில் உள்ளவர்களிற்கு சிறைச்சாலையின் மருந்து வழங்கும் பகுதியில் மருந்துகளை வழங்கிக்கொண்டிருந்த வேளை ரிசாத் பதியுதீன் அந்த பகுதிக்குள் சட்டவிரோதமாக சீற்றத்துடன் நுழைந்தார்.
நான் அவசியமான விபரங்களை பெற்றுக்கொண்ட பின்னர் அவரை அழைப்பதாக தெரிவித்து அவரை அங்கிருந்து செல்லுமாறு கேட்டேன்.
ரிசாத் பதியுதீன் தனது அரசியல் செல்வாக்கு குறித்து குறிப்பிட்டு, தான் நினைத்தால் அந்த இடத்திற்கு மேலும் தகுதிவாய்ந்த மருத்துவரை அழைக்க முடியும் என குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அரசாங்கத்திற்குள் தனக்குள்ள அரசியல் செல்வாக்கு குறித்து தெரிவித்த பின்னர், அவர் மரண அச்சுறுத்தல் விடுத்தார்.
தகாத வார்த்தைகளால் திட்டடினார்.
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளை சிறைக் கைதியொருவம் அதிகாரியொருவரும் காணப்பட்டனர்.
நடந்ததை அறிந்ததும் மூன்று சிறைச்சாலை அதிகாரிகள் ரிசாத் பதியூதினை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
மருந்துபெறுவதற்காக வந்த சில கைதிகள் இந்த சம்பவத்தை பார்த்தனர்,
நான் எனது மற்றும் குடும்பத்தின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முறைப்பாடு செய்ய தீர்மானித்தேன் என பாதிக்கப்பட்ட மருத்துவர் தெரிவித்துள்ளார்.


