திருகோணமலை – தோப்பூர் பகுதியிலுள்ள சின்னக்கள்வான் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்குள்ளாகி பலத்த காயங்களுடன் உயிர்தப்பி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.




இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் தோப்பூர் – செல்வநகரைச் சேர்ந்த 43 வயதுடைய குடும்பஸ்தரே பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார்.
இவர் சின்னக்கள்வான் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது காலினை முதலை கவ்வி இழுத்துள்ளது.இதன்போது முதலையுடன் போராடி உயிர்தப்பி கரைக்கு வந்து சேர்ந்துள்ளார்.
அதில் அவரது காலின் குதிப் பகுதியை முதலை கடித்து காயப்படுத்தியுள்ளது.
தோப்பூர் சின்னக்கள்வான் ஆற்றில் தொடர்ந்தும் முதலைகளின் அட்டகாசம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்கள் அச்சத்துடன் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுவதால் முதலைகளை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தோப்பூர் பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




