ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரிய இளைஞர் சி.ஐ.டி.க்கு அழைப்பு

2019 ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நீதி வழங்கப்பட வேண்டுமென்று சமூக ஊடகங்கள் மூலம் தனது கருத்துக்களை தெரிவித்த இளைஞர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சி.ஐ.டி.யின் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளர் இந்த அழைப்பினை எழுத்துபூர்வமாக அறிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச் செயல்கள் குறித்து சி.ஐ.டி சிறப்பு விசாரணையைத் தொடங்கியதால், உண்மையை விசாரிக்க இளைஞர் சி.ஐ.டி.க்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு சி.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் குறித்த நபர் காலி, ஹினிதும பகுதியில் வசிப்பவர் ஆவார். அவர் கத்தோலிக்க கவுன்சில் உறுப்பினராகவும் சமூக சேவகராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்டர் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் தொடர்பு இருப்பதாகவும், எனவே இது குறித்து அரசு விசாரணை நடத்த வேண்டுமென்றும் அவர் முகப்புத்தகத்தில் கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *