மன்னார் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு பெற்றுக் கொள்ள 8 ஆயிரத்து 700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
இன்று (24) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையான 10 நாட்கள் நாட்டில் ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு 2000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.
2 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையானது கர்ப்பிணி தாய்மார்கள், சிறுநீரக நோயாளிகள், வயோதிபர் கொடுப்பனவு, ஓய்வூதிய கொடுப்பனவு, சமூர்த்தி போன்ற எந்த ஒரு கொடுப்பனவுகளும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளாத குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படவுள்ளது.
இதற்காக மன்னார் மாவட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 8 ஆயிரத்து 700 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.





