சொந்த மண்ணில் ஆஸிடம் மண்டியிட்டது இந்தியா!

இந்தியா அணிக்கெதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில், அவுஸ்ரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் அவுஸ்ரேலியா அணி தொடரை வென்றுள்ளது.

சென்னையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 49 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 269 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மிட்செல் மார்ஷ் 47 ஓட்டங்களையும் அலெக்ஸ் கெர்ரி 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஹர்திக் பாண்ட்யா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் சிராஜ் மற்றும் அக்ஸர் பட்டேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 270 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 49.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 248 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, விராட் கோஹ்லி 54 ஓட்டங்களையும் ஹர்திக் பாண்ட்யா 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

அவுஸ்ரேலியா அணியின் பந்துவீச்சில், ஆடம் செம்பா 4 விக்கெட்டுகளையும் ஆஸ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ஆடம் செம்பா தெரிவுசெய்யப்பட்டதோடு, தொடரின் நாயகனாக மிட்செல் மார்ஷ் தெரிவுசெய்யப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *