வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு மாவை கண்டனம் – போராட்டத்திற்கும் அழைப்பு! samugammedia

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஷ்வரர் ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் மற்றும் சூலங்கள் என்பன உடைத்து வீசப்பட்டமை தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் முறையிட்டதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றையதினம் நான் வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியிருந்தேன். வெடுக்குநாறிமலை இராணுவத்தினுடைய கட்டுப்பாட்டில் இருக்கின்ற போது இந்த சிலைகள் என்ன காரணத்திற்காக யாரால் பிடுங்கி, உடைத்து வீசப்பட்டிருக்கின்றது என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதற்கு பொருத்தமான நடவடிக்கையை நீங்கள் எடுக்க வேண்டும்.

அந்த ஆலயத்தை கட்டிக் கொடுக்க வேண்டும். அந்த சிலைகள் மீளவும் அந்த இடத்தில் நிறுவப்பட வேண்டும். இந்து மக்களுடைய மத உரிமையை நீங்கள் பாதுகாக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கூறினேன்.

தமிழர்களுடைய பிரதேசங்களில் சிங்கள மக்களை குடியேற்றுவது, தமிழ் மக்களுடைய நிலங்களை அபகரிப்பது, பௌத்த சின்னங்கள் வைப்பது, இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவது என இவ்வாறு தொடர்ச்சியாக பல நிகழ்ச்சிகளிடம் பெற்று வந்த காரணத்தின் அடிப்படையில் தான் இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்டது.

இலங்கை தமிழரசு கட்சி உருவாக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இந்த அடிப்படை காரணங்களை தந்தை செல்வநாயகம் குறிப்பிட்டு தமிழ் தேசிய இனத்திற்கு விடுதலை வேண்டும், சுதந்திர தமிழரசு வேண்டும் என்று 47 ஆம் ஆண்டில் நான் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் வெற்றி விழாவின் போது அவர் கூறியிருப்பதை நாங்கள் அறியலாம்.

தமிழர்களுடைய நிலங்கள் சிங்களமயமாக்குகின்ற செயற்பாடும், தமிழர் தேசங்களை பௌத்த நாடாக மாற்றி அபகரிக்கின்ற ஒரு நிலைமையும் கடந்த 70 ஆண்டுகளில் இலங்கையில் நடைபெற்ற வருவதற்கு எதிராக தமிழரசு கட்சியும், தமிழ்த் தேசிய கட்சிகளும் தொடர்ச்சியாக பல நீண்ட போராட்டங்களையும், விடுதலைக்காக ஆயுதப் போராட்டமும் கூட நடைபெற்றதை உலகம் அறியும்.

அந்தப் பின்னணி இப்போது ஒரு முடிவுக்கு வராமல் இப்பொழுதும் தொடர்கின்றது. நேற்று முன்தினமும் வெடுக்குநாறி பிரதேசத்தில் இருக்கின்ற சிவன் கோவில் அழிக்கப்பட்டிருக்கின்றது என்ற செய்தி மிகவும் பாரதூரமான ஒரு செய்தி.

இதனால் இனவாதத்துடன், மொழி ரீதியாக, நிலரீதியாக அழிக்கப்பட்டு பௌத்த பௌத்த சிங்களமயமாக்கப்படுவதற்கு இந்த இடத்தை தமிழர்களுடைய, பிரதேசங்களை திட்டமிட்டு ஆட்சியாளர்களும், சிங்கள தீவிரவாதிகளும் பௌத்த பிக்குகளும் தொடர்கின்றார்கள் என்பதை இந்த வெடுக்குநாறி மலையில் நடைபெற்ற ஆதி சிவன் கோவிலில் நடைபெற்ற சம்பவத்தை நாங்கள் பார்க்கின்றோம்.

உலகத் தமிழ் மக்கள், இந்து மக்கள் அல்லது நியாயத்திற்கு போராடும் மக்கள் அனைவரும் இந்த விடயத்தை கண்டிக்க வேண்டும். அதை நிறுத்தி தமிழ் தேசிய இனத்தின் உடைய விடுதலைக்கு ஆதரவு வழங்கினால் தான் இவ்வாறானதொரு நிகழ்வுகள் இடம்பெறாது தடுக்க முடியும் என்பதை ஏனைய தமிழ் மக்களுக்கும், உலகத் தமிழர் மக்களுக்குமிடையே நாங்கள் பேசுகின்றோம்.

ஆகையால் இதனை கருத்தில் வியாழக்கிழமை நாங்கள் அனைவரும் கட்சிகளுக்கு அப்பால் வவுனியாவிலே மொழி ரீதியாக, இனரீதியாக, மதரீதியாக தமிழ் மக்களுக்கு எதிராக நடக்கின்ற சம்பவங்களுக்கு நாங்கள் ஒரு போராட்டத்தை நடத்துவதற்கு அழைப்பை விடுத்திருக்கின்றோம். அனைவரையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதே நேரத்தில் ஜனாதிபதி அவர்கள் நேற்று மாலை எனக்கு குறிப்பிட்டது போல் விபரமான ஒரு கடிதத்தை நாங்கள் அனுப்பி வைப்போம். ஜனாதிபதி அவர்கள் இவ்வாறான மத ரீதியான, தேச ரீதியான தமிழர்களுடைய இனத்தை அழித்து விடுகின்ற செயற்பாட்டுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *