வடக்கில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனா மரணங்களும் உச்சம் பெறுகின்றது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வீதியில் அமைந்துள்ள கொமர்ஷல் வங்கியின் பிரதான கிளையில் பணியாற்றும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அந்தக் கிளை தற்காலிகமாக மூடப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன், அந்தக் கிளையில் பணியாற்றும் 40 உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்பு தொழிலாளிகள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையில் பணியாற்றும் உத்தியோகத்தர்கள், சுத்திகரிப்புத் தொழிலாளிகள் என 34 பேரிடம் நேற்று புதன்கிழமை மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.அவர்களில் சுத்திகரிப்பு தொழிலாளி ஒருவர் உள்பட 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனால் அங்கு பணியாற்றும் 40 உத்தியோகத்தர்களை சுயதனிமைப்படுத்தி கொமர்ஷல் வங்கியின் யாழ்ப்பாணம் பிரதான கிளையை தற்காலிக மூட மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு அங்கு நிரந்தரக் கடமையாற்றுபவர்கள் தவிர்ந்த வேறு கிளைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களைக் கடமைக்கு அமர்த்தி உரிய சுகாதார நடைமுறைகளின் கீழ் கிளையின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்கலாமென பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பா.சஞ்சீவன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.





