இந்தியா முதல் இன்னிங்ஸில் 78 ஓட்டங்களுக்கு சுருண்டது: இங்கிலாந்து அபார துடுப்பாட்டம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி தற்போது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ரொறி பர்ன்ஸ் 52 ஓட்டங்களுடனும் ஹசீப் ஹமீட் 60 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 42 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.

லீட்ஸ் மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, 78 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ரோஹித் சர்மா 19 ஓட்டங்களையும் ரஹானே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில், ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் கிரைஜ் ஓவர்டொன் ஆகியோர் 3 விக்கெட்டுகளையும் ரொபின்சன் மற்றும் சேம் கர்ரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர முடிவில் எவ்வித விக்கெட் இழப்பின்றி 120 ஓட்டங்களை பெற்றது.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை இங்கிலாந்து அணி தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *