தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுபரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59ஆயிரத்து 621 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள நிலையில், மேல் மாகாணத்திற்கு நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் 13 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்று வியாழக்கிழமை மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறும் பகுதியில், 307 வாகனங்களில் பயணித்த 515 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
அத்தோடு மேல் மாகாணத்துக்கு பிரவேசித்த 302 வாகனங்களில் பயணித்த 580 பேர் சோதனைச்சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.





