கொரோனா நோயாளர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் இன்றி, எந்தவித நோய் எதிர்ப்புச் சக்தி மருந்துகளையும் கொடுக்க வேண்டாம் என மருந்தியல் பேராசிரியர் வைத்தியர் பிரியதர்ஷனி கலப்பத்தி தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இதனை தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இதுவரை எந்த விதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.
கொரோனா தொற்றறை கட்டுப்படுத்துவதற்கு தற்போதுள்ள மிகச் சிறந்த தீர்வு தடுப்பூசியேயாகும்.
அத்துடன், மருத்துவ ஆலோசனையின்படி விட்டமின் வகைகளை எடுத்துக் கொள்வதாக இருந்தால், அந்த மருந்துகளை மாத்திரமே நீங்கள் எடுக்க வேண்டுமென்றும் பேராசிரியர் கேட்டுக்கொண்டார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர்கள் காய்ச்சல் அல்லது உடல் வலி இருந்தால் இரண்டு பரசிட்டமோல் மாத்திரைகளை ஒரு நாளைக்கு மூன்று நேரம் அல்லது ஆறு மணித்தியாலங்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும், சிறிய குழந்தைகளுக்கு அவர்களின் எடைக்கு ஏற்ப பரசிட்டமோல் கொடுக்கப்பட வேண்டுமென்றும் என கூறினார்.
இதேவேளை, இருதய நோய் உள்ளவர்கள் வழமையாக உட்கொள்ளும் எஸ்பிரின் மாத்திரைகளை, கொரோனா தொற்றாளர்கள் எடுக்கும் போது கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.





