
தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நீடிப்பதா இல்லையா என்ற தீர்மானம் இன்று(27) மாலை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியின் இன்றைய கூட்டத்தின் போது, நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணமடைந்தோரின் தொகை ஆகியவை ஆராயப்படும்.
இதனை, கவனத்திற் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதியால் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது நூற்றுக்கு நூறு வீதம் முறையாக இடம்பெறவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிதாக தொற்றாளர் உருவாவதைத் தடுக்கவும் வைரஸ் பரவலை தடுக்கவே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாக பின்பற்றி பொறுப்புடன் செயற்பட தவறுவார்களானால் தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிக்க நேரிடும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.




