இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகளை இடிக்க முடியும்- கரைச்சி பிரதேச சபை தவிசாளர்

இரணைமடு சந்தி பகுதியிலுள்ள வீதியில், இராணுவத்தினரால் அமைக்கப்படும் கட்டுமான பணிகள் நிறுத்தப்படாவிடின்,  பிரதேச சபைகள் சட்டத்தின்  ஊடாக அதனை இடிக்க முடியும் என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அருணாசலம் வேழமாலிகிதன் மேலும் கூறியுள்ளதாவது,  “கிளிநொச்சி- கரைச்சி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் அமைந்திருக்கக்கூடிய இரணைமடு சந்தியை மையமாக வைத்து, இராணுவத்தினரால் பாரிய வளைவு ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வளைவை இடைநிறுத்தி, உரிய அனுமதியின் பிரகாரம் அதனை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு  சம்மந்தப்பட்ட தரப்பிற்கு பல தடவை தெரிவித்துள்ளோம்.

ஆனால், இதுவரை காலமும் எந்ததொரு நடவடிக்கையும் எடுக்கப்படாதமையினால், இந்த விடயம் தொடர்பாக சபையில் தீர்மானம் ஒன்றினை எடுத்து, சபையினுடைய 52வது பிரிவு அறிவுறுத்தலிற்கு அமைவாக அவற்றை இல்லாது செய்து விடுவதற்கு அல்லது நீதிமன்றத்தினை நாடுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

கிளிநொச்சி நகரத்தில் அமைக்கப்படுகின்ற வளைவுகள் மற்றும் சின்னங்கள் நகர ஆக்கத்திற்கு உதவக்கூடிய வகையிலே பொருத்தமானவகையில் அமைப்பதற்கான அனுமதிகள் துறைசார்ந்த திணைக்களங்களுடன் இணைந்ததாக வழங்கப்பட வேண்டும் என எங்களிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் இரணைமடு சந்தியில் இராணுவத்தினரால் அனுமதி எதுவுமின்றி வளைவு கட்டப்படுகின்றமை தொடர்பில் பொது மக்களினால் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆகவே, இந்த விடயம் தொடர்பில்,  நாங்கள் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுத்து, கட்டுமான பணிகளை நிறுத்துமாறு நாங்கள் அந்த கட்டடத்திலே ஒட்டியுள்ளோம்.

இவ்வாறு எழுத்து மூலமாக நகர்த்தல்களை செய்து கொண்டிருந்த வேளையில், பயணத்தடை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் பிரதேச சபையில் ஏற்பட்ட எதிர்பாராத கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அலுவலக பணிகளை நாங்கள் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இந்த இடைநிறுத்தப்பட்ட காலத்தினை பயன்படுத்தி இராணுவத்தினர், குறித்த பணிகளை முன்னெடுத்து வருவதாக பொது மக்களால் மீண்டும் எமக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, இந்த பணிகளை உடனே நிறுத்தி உரிய நடைமுறைகளை பின்பற்றி இராணுவத்தினர் அனுமதியினை பெற்றுக்கொள்ள வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *