மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

மன்னாரில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று (வியாழக்கிழமை) உயிரிழந்துள்ளமையை தொடர்ந்து, மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தியர் ரி.வினோதன்  மேலும் கூறியுள்ளதாவது,  “நேற்று, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மன்னார் சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த (68 வயது) பெண் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இதன்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோன்று குருநாகல் பகுதியை சேர்ந்த (82 வயது) வயோதிபர் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று வாரங்களாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று இரவு, உயிரிழந்துள்ளார்.

இதேவேளை  மாவட்டத்தில் கடந்த 1 ஆம் திகதி முதல் நேற்று  வரை 515 கொரோனா தொற்றாளர்களும் மாவட்டத்தில் தற்போது வரை 1,556 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *