மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்!- வைத்தியர் நா.மயூரன்

மட்டக்களப்பில் டெல்டா மற்றும் அல்பா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 24 மணித்தியாலயத்தில் கொரோனாவினால் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் புதிதாக 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே வைத்தியர் நா.மயூரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், செங்கலடி, வெல்லாவெளி, வாழைச்சேனை, வவுணதீவு, ஆரையம்பதி ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் தலா ஒருவர் வீதம் 7 பேர் உட்பட 10 பேர்  உயிரிழந்துள்ளதையடுத்து மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 211 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மாவட்டத்தில் எழுமாறாக எடுக்கப்பட்ட 3 பேரின் பீ.சி.ஆர்.பரிசோதனையின் மாதிரிகள், கொழும்பு ஜெயவர்தன பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட மாதிரிகளில் இருவருக்கு டெல்டா வைரஸும் ஒருவருக்கு அல்பா வைரஸும் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது, மாவட்டத்தில் டெல்டா வைரஸ் தொற்று பரவியிருக்கின்றதுடன் ஒருவாரத்தில் ஆயிரத்து 982 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் நாளாந்தம் 300 தொற்றாளர்கள் கண்டறியப்படுவதுடன் 5 க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து வருகின்றனர்.

ஆகவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதனை தவிர்த்தால்தான் வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *