இலங்கையை தொடர்ந்து 04 வாரங்களுக்கு முழுமையாக முடக்க வேண்டும்-விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை..!

இலங்கையை தொடர்ந்து 03 அல்லது 04 வாரங்களுக்கேனும் முழுமையாக முடக்கிவைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்காவின் பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும் மக்களின் நடமாட்டமும், வாகனப் போக்குவரத்துக்களும் சாதாரண நாட்களில்போன்றே இடம்பெறுவதாகவும் அந்தக்கட்சி தெரிவிக்கின்றது.

அத்தோடு கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார்.

கொரோனா தொற்று அச்சறுத்தலில் நாட்டை முடக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது மிகவும் அவசியமானது. நாட்டின் பொருளாதாரத்தை விடவும் நாட்டு மக்களின் உயிரைப் பாதுகாப்பதற்கே முன்னுரிமையளிக்க வேண்டும். இருந்த போதிலும் இன்று நாடு முழுமையாக மூடப்படவில்லை.

நாட்டை முழுமையாக மூடினால் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணல், பிரதேசங்களைத் தனிமைப்படுத்தல், மேலும் தொற்று சமூகமயமாவதைத் தடுக்க முடியும். எனினும் நாட்டின் பொருளாதாரத்தினை காரணங்காட்டி ஆடைத்தொழிற்சாலை என பல விடயங்களுக்கு சந்தர்ப்பமளித்துள்ளனர். கொழும்பு நகருக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்துசெல்கின்றன.

மக்கள் இன்னும் வீதிகளில் நடமாடுகின்றனர். ஒன்றுகூடுகின்றனர். அதனூடாக எப்படி நாட்டை முடக்கிவைத்திருப்பதன் ஊடாக இலக்கு வைக்கப்பட்ட பிரதிபலனை அடையமுடியும்? குறைந்தது 03 அல்லது 04 வாரங்களுக்காவது நாட்டை முடக்கிவைத்தால்தான் தொற்றிலிருந்து ஓரளவுக்கு நாட்டைக்காப்பாற்ற முடியும். கொரோனா தொற்று என்பது சாதாரண காய்ச்சல், தடிமன் போன்றதென்று ஆளுங்கட்சி உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

முழு உலகமும் இந்த தொற்றானது அபாயகரமானதென்று தெரிவித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியின் இந்த கருத்தினால் மக்கள் மத்தியில் கோவிட் தொற்று மீதான அச்சம் குறைந்து சுகாதார பழக்க வழக்கங்களையும் உதாசீனப்படுத்தும் நிலைமை ஏற்படலாம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *