காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச சிறுவர் தினத்தில் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டமென்றை இன்று நடாத்தியுள்ளனர்.
யாழ் நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று காலையில் இப் போராட்டம் நடைபெற்றது.
சர்வதேச சிறுவர் தினமான இன்று கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களை மீட்டுத்தர வேண்டுமென வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் யாழ் மாவட்டச் சங்கத்தின் ஏற்பாட்டில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போது பல நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டும் படையினரிடம் கையளிக்கப்பட்டும் காணாமல் போயுள்ள எமது சிறுவர்களை எம்மிடமே ஒப்படைப்பதற்கு சர்வதேசம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.
எமது பிள்ளைகளைக் காணவில்லை என கடந்த பத்து வருடத்திற்கு மேலாக நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் இதுவரையில் இலங்கை அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே இனியும் தாமதிக்காது சர்வதேசம் காத்திரமான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மீண்டும் கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.









