மேய்ச்சல் தரவைப் பிரச்சினை…!சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம்…! மட்டு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை…!samugammedia

எமது பிரச்சினைக்கு சில தினங்களுக்குள் தீர்வு வழங்காவிட்டால் வீதி மறிப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் அத்துடன் சாகும் வரையில் உண்ணாவிரத போராட்டம் நடாத்துவோம் என மட்டக்களப்பு கால்நடை பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட கால்நடை பண்ணையாளர்கள் 19வது நாளாகவும் இன்றைய தினமும் கால்நடை பண்ணையாளர்கள் போராடிவருகின்றனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15) காலை முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்றைய தினமும் பண்ணையாளர்கள் பல்வேறு சுலோகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

19தினங்களை கடந்துள்ள போதிலும் தமது பிரச்சினை தொடர்பில் அரசியல்வாதிகளோ,அதிகாரிகளோ பாராமுகமாக இருப்பதாகவும் இதன்போது விசனம் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது நீதிமன்ற கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும்,கால்நடை பண்ணையாளர்களின் நிலத்தை விட்டுவெளியேறுமாறும்,கால்நடை பண்ணையாளர்களை வாழவிடுமாறும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

சில அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் போராடிவரும் தம்மை கேலிக்குரியதாக எண்ணுவதாகவும் தீர்வினை வழங்கவேண்டியவர்கள் இவ்வாறு தம்மை கருதுவது கவலைக்குரியது எனவும் தமக்கான தீர்வினை சில தினங்களுக்குள் வழங்காவிட்டால் மாவட்டத்தில் பாரியளவிலான வீதி மறிப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ள நிலையில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டங்களையும் முன்னெடுக்கவுள்ளதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

தமது நிலைமையறிந்து தமக்கான போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர்கள் இன்று பின்னடிக்கும் நிலைமை காணப்படுவதாகவும் சிலர் அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் நிலைமை காணப்படுவதாகவும ;பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply