சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய இனம் தெரியாத நபர்கள்! samugammedia

வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர் இன்று காலை கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின் வீட்டுக்கு சென்று விசாரணைகனை மேற்கொண்டனர்.

தமது வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய இனம் தெரியாத நபர்கள் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் நேற்று செவ்வாய் கிழமை (3)  நேரில் சென்று முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக இன்று வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

லவக்குமார் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளையிடம் வாக்கு மூலத்தினை பெற்றதுடன் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். அத்துடன் பிரதேசத்தில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீவி ஒளிப்பதிவு கருவிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.

கடந்த 2 ஆம் திகதியன்று இரவு 11.30 மணியளவில்  தமது வீட்டுக்கு முன்பாக நின்று சத்தமிட்டு 2 அழைத்தார்கள்.நான் வெளியில் சென்றபோது 3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கலர் மற்றும் கறுப்பு ஆடைகள் அணிந்திருந்தார்கள்.

வாய்கள் துணியால் கட்டப்பட்டு தலைக்கவசத்தினால் முகத்தை மறைத்திருந்ததுடன் அவர்கிடம் ரி-56,ஏ.கே-47 துப்பாக்கிகளும் வைத்திருந்தனர்.மோட்டார் சைக்கிளில் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்டிருந்தன.தன்னைப்பார்த்து தேவையற்ற வேலைகளை செய்வதாகவும் அவற்றினை நிறுத்தவேண்டும் என்று கூறினார்கள். 

தீவுச்சேனை என்னும் இடத்தில் மறைக்கப்பட்டிருந்த விடயம் அதனை கதைப்பதற்கு மறுபடியும் தோண்டியெடுப்பதற்கு நிங்கள் எத்தனிக்கக் கூடாது. 

இன்று உங்களை கொல்லவே வந்தோம்.ஆனால் உங்களை எச்சரிக்கிறோம் என்று கூறிச் சென்றதாக தமது வாக்குமூலத்தை ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *