ஜனாதிபதி தேர்தல் களத்தில் தம்மிக்க பெரேரா…! எமக்கு சவால் அல்ல…! ஐ.தே.க …!samugammedia

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது எமக்கு சவாலாக அமையப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்ன தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று(10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறான எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடமே இடம்பெற இருக்கிறது. அதனால் உரிய காலத்தில் தேர்தல் இடம்பெறும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திடடமிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கின்றபடியாலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்மானங்களை விரைவாக முன்னெடுக்க முடிந்தது.

அதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்போதைக்கு இல்லாமலாக்க எந்த திட்டமும் இல்லை. ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும்  என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதனால் எதிர்காலத்தில் அனைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளலாம்.

இலங்கை வங்குராேத்து அடைந்திருந்த போது நாட்டை மீட்பதற்கு யாரும் முன்வராத நிலையில் இந்த நாட்டை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர யார் நடவடிக்கை எடுத்தார் என்பது மக்களுக்கு தெரியும்.

அதனால் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர்கள் யாரும் சவாலாகப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *