அதிகார அரசியலின் புதிய நாடகம் அரங்கேற்றியுள்ளது…! அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் சஜித்…! samugammedia

அதிகார அரசியலின் புதிய நாடகத்தை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அரங்கேற்றியுள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக ஜில்மாட் நாட்டை உருவாக்குவது தான் நடந்து வருகின்றது. ஜனாதிபதி உருவாக்க முயற்சிக்கும் ஸ்மார்ட் நாட்டின் வடிவம் இதுதானா என்று நாம் கேள்வி எழுப்புகிறோம்.

மாற்றத்தை தன்னில் இருந்து ஆரம்பிப்பதாக கூறிய ஜனாதிபதி காண்பித்துள்ள வேடிக்கையான முன்ணுதாரனம் புதுமையானதாகும்.

சுகாதார அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல்லவின் செயற்பாடுகள் தோல்வியடைந்ததால்,நாங்கள் நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வந்ததோடு,அரசாங்கம் ஒன்றிணைந்து அவரை பாதுகாத்தது.

நாட்டின் சுகாதாரத் துறை வீழ்ச்சியடைந்தாலும்,அவரை நம்பி அவரைப் பாதுகாத்தார் என்று சொன்ன அதே சுகாதார அமைச்சர் இன்று ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டு,113 பேரின் நம்பிக்கையை நிர்வாணமாக்கியுள்ளார்.

பசுமைப் பொருளாதாரம், பசுமை அபிவிருத்தி போன்ற எண்ணக்கருக்கள் குறித்துப் பேசி,தான் சுற்றாடல் குறித்து மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாக காட்ட முயற்சிக்கும் ஜனாதிபதி, சுகாதாரத்துறையை அழித்த கெஹலிய ரம்புக்வெல்லவை சுற்றாடல் அமைச்சராக நியமித்ததன் மூலம்,சுகாதாரத் துறையின் சீரழிவைப் போன்று சுற்றாடலையும் சீரழியச் செய்வதற்கான வாய்ப்பைத் திறந்து கொடுத்துள்ளமை, அவரது கொள்கைகளின் நோக்கம் மக்களின் நலனையோ,சுற்றுச்சூழலின் நலனையோ பேனுவதை விடுத்து,தனது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு மட்டுமே என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

சட்டவிரோதமான முறையில் மின் கட்டணத்தை அதிகரித்து, சுகாதாரத் துறை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை அழிவிற்கிட்டுச் சென்று, தனது அதிகாரத்தை பாதுகாத்துக்கொள்ள,வெட்கக்கேடான செயல்களில் ஈடுபட்டு அரங்கேற்றும் வேடிக்கையான இந்த நாடகங்களையும் அரசியல் சூதாட்டங்களையும் நாட்டு மக்கள் இனிமேலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தொடர்ந்தும் பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்து,குறுகிய நோக்கத்துடன், தன்னிச்சையான முடிவுகளை எடுத்து,சர்வாதிகார அரசாங்கமாக தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதாக கூறி,ஜனநாயக விரோதமாக கொண்டு செல்லும் இந்நிகழ்ச்சி நிரலை நிறுத்தி, உடனடியாக தேர்தலை நடத்துமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *