தமிழர் பகுதியில் மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு குழி தோண்டி புதைத்த கொடூரம் – கணவனின் பதைபதைக்கும் வாக்குமூலம் samugammedia

முல்லைத்தீவு – நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் இளம் குடும்ப  பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், அப்பெண்ணின் கணவன், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பில் கணவன் அளித்த வாக்குமூலத்தில்,

எங்கள் இருவருக்கு இடையில் ஒவ்வொரு நாளும் பிரச்சினை ஏற்படும். சம்பவ தினத்தன்று இருவரும் சண்டை போட்டுக் கொண்டோம். நான் மனைவியின் கழுத்தில் தாக்கிய போது  அவள் நிலத்தில் விழுந்தாள், நீண்ட நேரம் எழும்பவில்லை. தொட்டுப்பார்த்தபோது இறந்துவிட்டாள். என்னசெய்வதென்று தெரியாமல், வீட்டுக்கு பின்புறம்  மலசலகூடத்துக்கு அருகில் உள்ள குழியில் போட்டு மூடிவிட்டதாக கணவன் வாக்குமூலம் அளித்துள்ளார். 

புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த  23 வயதான பெண்ணும்,   முள்ளியவளை குமாரபுரத்தை சேர்ந்த 23 வயதான ஆணும்   திருமணம் முடித்து  நீராவிபிட்டி கிழக்கு பகுதியிலுள்ள வாடகை வீடொன்றில் கடந்த மூன்று வாரமாக வசித்து வந்த நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

இந் நிலையில் குறித்த பெண் கொலை தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு நீராவிபிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த தனது மகளையும் மருமகனையும் காணவில்லை எனவும், வீட்டின் பின்புறத்தில் புதிய குழி இருப்பதால் அதை தான் சந்தேகிப்பதாகவும் தாயார்  முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்தே சடலம்  நேற்று கைப்பற்றப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட கணவன் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் இன்று (25) முன்னிலைப்படுத்தப்பட்டார். ​

அவரை நவம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *