இந்தியாவுடனான உத்தேச பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான 12ஆவது சுற்று பேச்சுவார்த்தைக்குள் இலங்கை நுழைவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ETCA உடன்படிக்கையை மேற்கொள்ள இரு நாடுகளும் 2016ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டுவரை 11 சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளன.
தற்போதைய இந்தியா-இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை (ISFTA) விரிவுபடுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் என்ற கருத்திட்டத்தின் கீழ் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.
ISFTA ஒப்பந்தத்தைவிட ETCA உடன்படிக்கை பரந்த நோக்கத்தைக் கொண்டுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தும் என்பதுடன், விநியோக திறனை விரிவுபடுத்தவும், சந்தை அணுகலை விரிவுபடுத்தவும் ETCA வாய்ப்பை வழங்குமென அரசாங்கம் கருதுகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பால் கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பின்னர் ETCA உடன்படிக்கையை கைச்சாத்திடும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இந்தியாவுடன் முன்னெடுக்கப்படவில்லை.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இந்தியாவுடன் திறந்த மற்றும் வெளிப்படையாக பொருளாதார உடன்படிக்கைகளை மேற்கொள்வதில் ஆர்வங்காட்டியே வந்துள்ளார்.
அதன் பிரகாரம் மீண்டும் ETCA உடன்படிக்கையை கைச்சாத்திடம் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதுடன், கடந்த மாதம் மெய்நிகர் சந்திப்பொன்றையும் இருநாட்டு இராஜதந்திரிகளும் மேற்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின் போதும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
ETCA உடன்படிக்கையை கைச்சாத்திட அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை ஒருபுறம் முன்னெடுத்துவரும் சூழலில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுடனும் பொருளாதார உறவுகளை புதுபிக்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார உறவுகளையும் வலுப்படுத்த அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பிராந்தியங்களுடனான தனது ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார, சமூக, கலாசார உறவுகளை இலங்கை வலுப்படுத்தி வருகிறது.
ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயத்தில் இருநாட்டு உறவுகளை பலப்படுத்தும் வகையில் முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன.
2048 ஆம் ஆண்டளவில் இலங்கையின் பொருளாதாரத்தை அபிவிருத்தியடைந்த பொருளாதாரமாக மாற்றும் நோக்கத்தில் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசதரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.