தெதுறு ஓயா 5 வான் கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை! samugammedia

புத்தளம் மாவட்டத்தில் தெதுரு ஓயா மற்றும் தப்போவ ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்கள் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்தமையால், நேற்று தெதுரு ஓயாவின் நான்கு வான் கதவுகள் தலா நான்கு அடி உயரத்தில் திறக்கப்பட்டன.

எனினும், நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ச்சியாக கடும் மழை பெய்தமையால் , தெதுரு ஓயாவின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்த நிலையிலேயே இன்று அதிகாலை மேலும் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளன.

இதனால் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 13800 கன அடி நீர் வெளியேற்றப்படுகின்றது.

இதேவேளை, தப்போவ நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் ஒரு அடி உயரத்தில் திறக்கப்பட்டுள்ளன.

குறித்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 8800 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இவ்வாறு தெதுரு ஓயா மற்றும் தப்போவ ஆகிய  நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் வெளியேற்றப்படுவதால் குறித்த இரண்டு நீர்த்தேக்கங்களை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

எனினும், தொடர்ச்சியாக கடும் மழை பெய்தால் மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று முதல் தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் முந்தல், சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள பல கிராமங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளன.

எனினும், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீர், உடப்பு மற்றும் முந்துப்பந்திய ஆகிய கடற்பகுதிகளில் ‘அறுவாய்’ வெட்டப்பட்டு வெள்ளநீர் கடலுக்குள் விடப்பட்டது. 

முந்தல் மற்றும் ஆராச்சிக்கட்டு பிரதேச செயலாளர்கள் மற்றும் புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியின் கீழ், பெக்கோ இயந்திரம் கொண்டு அறுவாய் தோண்டப்பட்டு கடலுக்குள், வெள்ளநீர் விடப்பட்டது. 

இதனால், தற்போது முந்தல், சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ ஆகிய பிரதேச செயலகங்களின் கீழ் உள்ள கிராமங்களில் தேங்கி நிற்கும் வெள்ளநீர் தற்போது வழிந்தோடிக் கொண்டிருப்பதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.

மேலும், புத்தளம், பாலாவி, மஹாகும்புக்கடவல உள்ளிட்ட சில கிராமங்களும் வெள்ளத்தினால் மூழ்கிய போதிலும், சில மணித்தியாலங்களில் வெள்ளநீர் வழிந்தோடியதாகவும் கூறப்படுகிறது.

இங்கினிமிட்டிய மற்றும் ராஜாங்கன ஆகிய நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் உயர்வடைந்து காணப்படுகின்ற போதிலும், வான் கதவுகள் எதுவும் திறக்கப்படவில்லை என புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமைநேர அதிகாரி கூறினார்.

எனினும், தொடர்ந்தும் மழை பெய்தால் குறித்த நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளும் திறக்க நேரிடும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *