பல்கலை மாணவர் மீதான தாக்குதல் பேரினவாதத்தின் அடக்குமுறையை காட்டுகிறது – வேலன் சாமிகள் குற்றச்சாட்டு samugammedia

கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச் சென்ற வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை  காட்டி நிற்பதாக பொத்துவில்  பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.

அந்த மேச்சல் நிலங்களில் வாழ்கின்ற வாயில்லாத ஜீவன்கள் துன்புறுத்தப்படுவதும் சுட்டுக் கொல்வதும் தொடர்கதையாக உள்ள நிலையில் அதற்காக நீதி கேட்டு வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கில் போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.

இவ்வாறான நிலையில் சிங்கள பேரினவாத அரசின் பொலிசார் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவரையுமாக ஆறு பேரை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்காக சென்ற மதத்தலைவரான அருட்பணி ஜெகதாசுக்கு பொலிசார் அனுமதி வழங்கவில்லை.

நீதிவான் பிணையில் செல்ல மாணவர்களை அனுமதித்த போதும் குறுகிய நேரத்தில் கிராம சேவையாளர்களின் கடிதத்தை பெற வேண்டும் எனக் காரணம் கூறி விடுவிக்கப்பட்டவர்களை பொலிசார் திட்டமிட்டவகையில் மீண்டும் சிறையில் அடைத்தனர்.

ஜனநாயக வழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தமை கண்டிக்கத்தக்க விடயம்.

வடக்கு கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை சிங்கள பேரினவாதம் விரும்பாத நிலையில் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைக்கிறது.

தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடர்ந்து வரும் நிலையில் சர்வதேச அமைப்புக்கள் தலையீடு செய்ய வேண்டும்.

ஆகவே இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளக விசாரணை தேவையில்லை. சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தி நிற்பதற்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply