நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட கலைப்பொருட்கள் கண்காட்சி திறந்து வைப்பு!

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு தற்போது மீளக் கையளிக்கப்பட்டிருக்கும் தொல்லியல் பொருட்களை மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு இன்று தேசிய அருங்காட்சியகத்தில் நடைபெற்றது.

ஒல்லாந்து காலனித்துவக் காலத்தில் இலங்கையிலிருந்து நெதர்லாந்துக்கு கொண்டுச் செல்லப்பட்டு நெதர்லாந்தின் பிரசித்தமான சுதைமள அருங்காட்சியகத்தில் சில பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

தங்கத்தால் தயாரிக்கப்பட்ட உறையுடன் கூடிய வாள், வெள்ளியினால் செய்யப்பட்ட உறையுடன் கூடிய வாள், தங்கத்தால் செய்யப்பட்ட கத்தி, துப்பாக்கிகள் இரண்டு, லெவ்கே பிரிவுக்கு சொந்தமானதென கருதப்படும் பீரங்கி, உள்ளிட்ட 06 தொல்பொருட்களும் 1765 ஆம் ஆண்டில் ஒல்லாந்தர் கண்டி அரச மாளிகையை சுற்றிவளைத்த போது கிழக்கிந்திய ஒல்லாந்து நிறுவனத்தினால் எடுத்துச் செல்லப்பட்டிருந்தது.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் உறுதிப்பாடுகளை மையப்படுத்தி மேற்படி தொல்லியல் பொருட்களை இலங்கைக்கு மீளக் கையளிக்குமாறு இராஜதந்திர அடிப்படையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் விசேட நிகழ்வாக மேற்படி 06 தொல்லியல் பொருட்களும் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வானது புத்தசாசன மற்றும் சமய, கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க ஆகியோர் தலைமையில் தேசிய அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த தொல்லியல் பொருட்கள் டிசம்பர் 05 முதல் மறு அறிவித்தல் வரையில் கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளது.

இந்த விசேட நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் விசேட முத்திரையொன்றும் வெளியிடப்பட்டது.

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபாஹ் (Bonnie Horbach), ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, தேசிய நூதனசாலைத் திணைக்களப் பணிப்பாளர் சுஜானி கஸ்தூரியராச்சி உள்ளிட்டவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *