மயிலத்தமடுவில் 90வது நாளாக தொடரும் பண்ணையாளர்களின் போராட்டம்…!samugammedia

மயிலத்தமடு,மாதவனை பண்ணையாளர்கள் இன்றைய தினம் சித்தாண்டியில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மட்டக்களப்பு சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக தமது மேய்ச்சல் தரையினை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் 90வது நாளாக இன்றும் நடைபெற்றது.

இன்றைய தினம் தமது போராட்டம் ஆரம்பித்து 90வது நாளை பூர்த்திசெய்யும் நிலையில் தமது கோரிக்கை தொடர்பிலும் போராட்டம் தொடர்பிலும் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கண்டும் காணாத நிலையிலும் அலட்சியப்போக்குடனும் செயற்பட்டுவருவதாக தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எங்கள் மேய்ச்சல் தரைகள் எங்களுக்கே சொந்தம்,பசி துறக்கவந்த விலகின்உயிர் துறப்பது பௌத்த தர்மமா?,உயிர் கொலை புத்தனின் பிள்ளைகளுக்கு பொழுதுபோக்கா?,மாதவனை எங்கள் சொத்து போன்ற பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

தாங்கள் போராட்டம் நடாத்தி தொடங்கி இன்றுடன் 90 நாட்கள் கடந்துள்ள நிலையில் 190க்கும் மேற்பட்ட மாடுகள் கொல்லப்பட்டுள்ளதுடன் அத்துமீறிய குடியேற்றக்காரர்களினால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இது தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்கு முறையிடச்சென்றால் முறைப்பாட்டை தங்களுக்கு எதிராக திருப்பிவிடும் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் இதன்போது பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி,அரசியல்வாதிகள்,அதிகாரிகள் அனைவரும் எங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.மாறாக மயிலத்தமடு,மாதவனை பகுதியில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் செயற்பாடுகளே அதிகரித்துவருகின்றது.அங்கு கால்நடை பண்ணையாளர்களை பாதுகாப்பதற்கு என அமைக்கப்பட்ட பொலிஸ் காவலரணும் அங்கு சட்ட விரோத பயிhச்செய்கையாளர்களுக்கு உதவும் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றது.

இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு ஒரு சட்டம் தமிழ் மக்களுக்கு ஒரு சட்டம் என்பதையே பொலிஸாரின் செயற்பாடுகள் காணப்படுவதாகவும் தங்கள் மீது புகார் என்றால் உடனடியாக செயற்பட்டு நடவடிக்கையெடுக்கும் பொலிஸார் தங்களால் வழங்கப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தாத நிலையே காணப்படுவதாகவும் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமது போராட்டத்தினை தொடர்ந்து முன்கொண்டுசெல்லவுள்ளதாகவும் தமக்கு நீதிகிடைக்காவிட்டால் மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்டு நிர்வாக முடக்கத்தினை செய்யவேண்டிய நிலையேற்படும்எ னவும் பண்ணையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *