யாழ் சாவகச்சேரி- கச்சாய் வீதிப் பகுதியில் நேற்றையதினம்(13)பிற்பகல் சாவகச்சேரி இராணுவ புலனாய்வுப் பிரிவின் அதிரடி நடவடிக்கை மூலமாக 7கிலோ கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன்-இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கச்சாய் வீதி ஊடாக வடி ரக வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விரைந்து செயற்பட்ட புலனாய்வுப் பிரிவு கச்சாய் வீதி-வீரசிங்கம் ஒழுங்கையில் வைத்து கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடித்துள்ளனர்.
இதன்போது வாகன இயந்திர பகுதியில் மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 7கிலோ கஞ்சா பொதியை இராணுவ புலனாய்வுப் பிரிவு மீட்டதுடன்-சந்தேக நபர்கள் இருவரையும் பிடித்து சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.