கல்முனையில் நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிப்பு – மாநகரசபை முன்னாள் உறுப்பினர் குற்றச்சாட்டு…!samugammedia

கல்முனை மாநகரிலே  நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கல்முனை மாநகரத்திலே பலவிதமான அரசியல் அழுத்தங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன திருமதி மேகலா சிவகணேசன்  பலவிதமான அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்த நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதுமட்டுமல்ல கல்முனை பிரதேசத்திலே தமிழ் முஸ்லீம் என்ற வேறபாடின்றி மேலதிக காணிப் பதிவாளராக நீதியாக, நேர்மையாகத் தனது சேவையைச் செய்து வந்த டி.சிவதர்சன்  காணி மாற்றங்கள் தொடர்பில் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகவும் கல்முனையில் இருக்கின்ற சகோதர பாராளுமன்ற உறுப்பினர் கடுமையாக அவரைத் துன்புறுத்தியதன் விளைவாகவும் தன் பதவியை விட்டுச் சென்றுள்ளார்.

இவ்வாறு கல்முனையில் நீதியான நேர்மையான அரசியற் சாயம் பூசப்படாத அதிகாரிகளை அவர்களின் கடமைகளை நேர்மையாகச் செய்ய விடாமல் துரத்துகின்ற செயற்பாட்டிலே இன்று கல்முனை மாநகரம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

கடந்த காலத்தில் கல்முனை மாநகரசபைக்கு நேர்மையான ஒரு ஆணையாளர் நியமிக்கப்பட்டிருந்தார்.  தற்போது மட்டக்களப்பு மாநகரசபையிலே நேர்மையாகத் தன் கடமையைச் செய்துகொண்டிருக்கின்ற சிவலிங்கம் என்பவருக்கு  நேற்றைய தினம்  கிழக்கு மாகாண சுகதார அமைச்சின் செயலாளர் நியமனமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறான திறமையானவர்கள் இங்கு வந்த போது அவர்களையும் இங்கிருந்து துரத்தும், பயமுறுத்தும் விதமாகவே இன்று அம்பாறை மாவட்டத்திலே இருக்கின்ற முஸ்லீம் அரசியல்வாதிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த விதத்திலே நேற்றைய தினம் கல்முனை மாநகரத்திலே தமிழர்கள் செறிவாக வாழுகின்ற கல்முனை 01 என்ற பிரசேத்திலே கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  . அவரை நான் நேர்மையான பாராளுமன்ற உறுப்பினர் என்றே நினைத்தேன். அவர் ஊடகவியலாளராக இருந்த போது தமிழ் முஸ்லீம் மக்கள் மத்தியில் நீதியான சேவகனாகச் செயற்பட்டவர். ஆனால் தற்போது அவர் அவரது சமூகம் சார்ந்தவராகச் செயற்படுகின்றார். அது அவரின் பிழை அல்ல எங்களின் பிழை.

எங்கள் மாவட்டத்திலே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுகின்ற தமிழ் அரசியல்வாதிகள் மாற்றுச் சமூகத்திற்கு ஆதரவாகப் பேசுகின்ற போது எங்களுக்கு எதிராகச் செயல்படுகின்றவர்கள்  மேலும் எதிராகவே செயற்படுகின்றார்கள்.

இந்த நிலையிலே மழைகாலங்களிலே நீர் தேங்கி வடிந்தோடும் பிரதேசங்கள், நன்நீர் மீன்படியிலே ஈடுபடுகின்ற பிரதேசங்கள், விவசாய நிலங்கள் என்பவற்றை அவர்கள் நிரப்பி நகர அபிவிருத்தி என்ற போர்வையில் நரக அபிவிருத்தியைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். இதற்காக அந்தப் பிரதேசத்தை வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளார்கள்.

கல்முனையில் பல வீதிகள் குன்றம் குழியுமாக நடந்த செல்லக் கூட முடியாமல் இருக்கின்றது. நீரோடிச் செல்ல முடியாத வடிகான்கள்  இருக்கின்றன. கல்முனை பொதுச் சந்தை இடிந்து விழும் நிலையில் இருக்கின்றது. பொதுநூலக கட்டிடத்தை மாநகரசபையின் அலுவலகமொன்றாக மாற்றியுள்ளார்கள்.

இவ்வாறு பல விடயங்கள், பல இடங்கள் அபிவிருத்தி காணப்படாமல் இருக்கின்ற போது நரக அபிவிருத்தி மூலம் நீர் நிலைகளையும், விவசாய நிலங்களையும் நிரப்பி என்ன அபிவிருத்தி செய்யப் போகின்றார்கள். இது அவர்களின் வருமானங்களுக்காகவும், அவர்களின் சுயஅரசியலை தக்க வைப்பதற்காகவுமே ஆகும்.

அதுமட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டத்திலே தமிழ்ப் பிரதேசத்திலே இருக்கின்ற நீர்ப்பாசனத் திணைக்களங்களின் தமிழ் உயர் அதிகாரிகளை மாற்றி தங்களுக்குச் சாதகமான ஊழலுக்குத் துணை போகின்ற அதிகாரிகளை நியமிக்கின்றார்கள். இந்த விடயத்தில் எமது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனம் காப்பது மறைமுகமாக முஸ்லீம் அரசியல் தீவிரவாதத்திற்கு துணைபோவதாகவே நான் கருதுகின்றேன்.

ஏதும் நடந்ததன் பின்னர் போராட்டம் செய்வதற்கு மாத்திரம் வருவார்கள். போராட்டம் செய்து தமிழ் முஸ்லீம் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து தங்களுடை சுயநல அரசியலைச் செய்யும் நிலையிலேயே இன்றை அரசியற் தலைமைகள் இருக்கின்றார்கள்.

இவ்வாறான அநியாயமான செயற்பாடுகள் ஏன் தமிழர்களுக்கு மாத்திரம் இடம்பெறுகின்றது. தமிழர்கள் என்ன அநாதையா? யாராக இருந்தாலும் மனச்சாட்சியுள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்.

எனவே நகர அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழர்களின் பூர்வீக நிலங்கள் சுவீகரிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். தேர்தலிகளின் போது எத்தனையோ பொது விடங்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப்  தெரிவித்தார். அதனை நிறைவேற்றுவதற்கு முதுகெலும்பில்லாது எமது தமிழ் மக்களின் நிலங்களை அபகரிக்க முற்பட வேண்டாம். தமிழ் முஸ்லீம் சமூகங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தோற்றுவித்து வாக்குகளைப் பெறுவதை விடுத்து நியாயமான விடயங்களைச் செய்து முஸ்லீம் தமிழ் மக்களின் வாக்குகளை சேர்த்தே பெறலாம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *