யாழில் மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரம் தொடர்பில் யாழ் நீதிமன்றம் கட்டளை…!samugammedia

மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரம் தொடர்பான விசாரணைகளை எதிர்கொள்ளும் பிரசித்த நொத்தாரிசுவும் சட்டத்தரணியுமான ஒருவரை நிபந்தனையுடனான முற்பிணையில் செல்ல அனுமதி வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டது.

யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக ஏற்கனவே நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியிருந்தது.

அந்தத் தீர்ப்புக்கு மாறாக மோசடியாகத் தயாரிக்கப்பட்ட உறுதி ஊடாக அந்தக் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.

மோசடியாக எழுதப்பட்ட காணி உறுதிப்பத்திரம் தொடர்பாக அந்த உறுதிப்பத்திரங்களை வரைந்த பிரசித்த நொத்தாரிசும், சட்டத்தரணியுமான ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்பிணை விண்ணப்பத்தை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நேற்றுமுன்தினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது, இந்த உறுதியை வரைந்த பிரசித்த நெத்தாரிசு உண்மைக்குப் புறம்பாகத் தகவலை இட்டு மோசடியான முறையில் ஆவணம் ஒன்றைத் தயாரித்ததாகக் கூறி அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பொலிஸார் மன்றிடம் வேண்டுகோள் விடுத்தனர். சமர்ப்பணங்களின் பின்னர் கட்டளை நேற்று வழங்கப்படும் என்று நீதிமன்றம் தவணையிட்டது.

இந்த வழக்கு நேற்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. 

விசாரணை மேற்கொண்ட நீதிமன்றம் சட்டத்தரணிக்கு 5 லட்சம் ரூபா சொந்த சரீரப் பிணை என்ற நிபந்தனையுடன் முன்பிணை வழங்கி கட்டளையிட்டது. ஏற்கனவே நடைபெற்றுவரும் காணி வழக்கில் முன்னிலையாக வேண்டும் என்றும் மன்று உத்தரவிட்டது. அதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காணி மோசடி வழக்குகள் தொடர்பாக இதுவரை 5 நொத்தாரிசுகள் முன்பிணை பெற்றுள்ளனர். சிலர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *