இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்..! விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லரிப்பு பிரதேசத்தில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்ததினால் பாதிக்கப்பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

சிலர் உயரமான இடங்களில் தங்களது கால் நடைகளை பாதுகாப்பதற்காக தற்காலிக கொட்டில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

மேலும் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமையால் படகுகள் மூலம் போக்குவரத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

வயல் நிலங்கள், சிறுதோட்டப் பயிர்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கால் நடைகளுக்கும் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் கவலை  தெரிவித்தனர்.

மருத்துவ சேவையும், குடிநீரும் தேவையாகவுள்ளதாகவும், இன்றைய தினம் தமிழ் மக்கள் கூட்டணி கட்சியினர் சமைத்த உணவு வழங்கியதாகவும்  தெரிவித்தனர்.

இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆறுகளை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளப்பெருக்கு குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் பல வீதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன், குறித்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இரத்தினபுரி, கலவானை, கிரியல்ல, கஹவத்தை, இறக்குவானை மற்றும் பலாங்கொடை ஆகிய பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், சில வீதிகளின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதுடன், சில வீதிகளின் போக்குவரத்து ஒருவழிப் போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply