கிண்ணியாவில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ள நீர்…! மக்கள் அவதி…! அதிகாரிகள் பாராமுகம்…!samugammedia

நாட்டின் பல பாகங்களிலும் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில், நேற்று (08)இரவு முதல் 24 மணித்தியாலயத்திற்கும் அதிகமான மழை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தற்போது இன்று (09)பெய்து வரும் அடை மழை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள மாஞ்சோலை,மாஞ்சோலைச் சேனை ஆலிம் வீதி ,சேனைக்காடு உள்ளிட்ட பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால் சமைத்து உண்ணவோ, உறங்கவோ முடியாது உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் முறையான வடிகான் வசதியின்மையால் நீர் வழிந்தோட முடியாது வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதாகவும் இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர் கொள்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களின் நிலை தொடர்பில் உரிய அதிகாரிகள் வந்து  பார்வையிடவோ வெள்ள நீர் வடிந்தோடக்கூடிய வாய்க்கால்களை வெட்டவோ இல்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் முறையான வெள்ள நீர் வடிந்தோடக் கூடிய வழி வகைகளை செய்து தருமாறும் தங்களுக்கான பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நஷ்ட ஈடுகளை வழங்குமாறும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *