122 ஆவது தடவையாக ஜேர்மன் சமூக சேவையாளரான 81 வயதான திருமதி உர்சுலா பீயர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 121 தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த ஜேர்மன் சமூக சேவையாளரான 81 வயதான திருமதி உர்சுலா பீயர் இன்றையதினம் மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
அவரும் தூதுக்குழுவினரும் இன்று காலை 05:35 மணியளவில் இந்தியாவின் மும்பையிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-142 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் உருவாக்கிய “சமாதானமும் கருணையும்” அறக்கட்டளையின் ஊடாக, இலங்கையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், ஒழுக்கம் ஆகிய துறைகளில் “குழந்தையைத் தத்தெடுப்போம் – கிராமத்தை அமைப்போம்” என்ற கருத்தின் கீழ் பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் குழு மற்றும் அவரது “சமாதானம் மற்றும் கருணை” அறக்கட்டளையின் அதிகாரிகள் குழுவும் இன்று இலங்கைக்கு வருகைவந்த திருமதி உர்சுலா பேயரை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.









