காணி உரிமை எப்போது கிடைக்கின்றதோ, அன்று தான் மலையக மக்கள் பிரஜா உரிமை கிடைத்த நாளாக கருத முடியும் – உதயகுமார் எம்.பி அனல் பேச்சு..!samugammedia

காணி உரிமை என்பது தனி ஒரு மனிதனின் இன்றியமையாத பொருளாதார உரிமை ஆகும். இலங்கை நாட்டில் காணி உரிமை சட்ட ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட ஒரு உரிமையாகவும் காணப்படுகின்றது. அரசியலமைப்பில் ஒருவர் விரும்பிய இடத்தில் வசிப்பதற்கும், தொழில் செய்வதற்கும் ஆன உரிமை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திலும் காணி ஆதனம் ஒன்றை தனியாகவோ அல்லது கூட்டாகவோ சொந்தமாக வைத்திருப்பதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் பிரஜா உரிமை பெற்றிருந்தாலும் காணி உரிமை இல்லாவிட்டால் அதில் எவ்வித அர்த்தமும் பயனும் இல்லை. மலையக மக்களுக்கு எப்போது காணி உரிமை கிடைக்கின்றதோ, அன்று தான் பிரஜா உரிமை கிடைத்த நாளாக பெருமைப்பட முடியும். 200 வருடங்களாக மலையக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். 200 வருடங்கள் கடந்த பின்பும் இந்த நிலைமை தொடரக் கூடாது என்பதற்காக தான் மலையக மக்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமை கொண்ட விவசாயிகளாக மாற்ற வேண்டும் என்று போராடுகின்றோம் என்று தெரிவித்தார் உதயகுமார் எம்.பி

இன்று (12) நாடாளுமன்றத்தில், பெருந்தோட்ட முறை தேயிலை பயிர்ச்செய்கையை சிறுதோட்ட முறையாக மாற்றி அமைத்து தொழிலாளர்களை காணி உரிமையாளர்களாக்குமாறு வேலுகுமார் எம்.பி சமர்ப்பித்த பிரேரணையை ஆதரித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

உதயகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்… 

மலையக மக்கள் எதிர்கொள்ளும் சம்பளப் பிரச்சினை, வாழ்வாதாரப் பிரச்சினை என்பவற்றுக்கு உறுதியான இறுதியான தீர்வு எது என்றால், அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவது தான். இந்த நாட்டில் வாழும் சிங்கள மக்களாக இருக்கலாம் வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் மக்களாக இருக்கலாம் ஏதோவொரு வகையில் காணி உரிமை கொண்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் இந்த நாட்டில் பிரஜையாக உள்ள மலையக மக்களுக்கு ஒரு அங்குலம் நிலம் கூட உரிமை இல்லை என்பது வேதனையான விடயம். பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் அந்த லயன் வீடுகள் கூட அவர்களுக்கு உரித்து இல்லை என்பது மேலும் துயரம் தரும் விடயம். இதுவொரு பாரிய மனித உரிமை மீறல் என்றும் கூட சொல்லலாம். மலையக மக்களுக்கு உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனால் மந்த போசனை, போசாக்கு இன்மை, வறுமை அதிகரித்து காணப்படுகின்றது.  உரிமை என்று சொல்ல ஒரு அங்குல துண்டு காணி இல்லை. சொந்த வீடு இல்லை. ஆனால் ஆண்டாண்டு காலமாக இந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக அவர்கள் உழைக்கிறார்கள். 

கடந்த காலங்களில் இந்த நாட்டை “சிலோன் டீ” என்ற பெருமை வாய்ந்த நாமத்தோடு உலக அளவில் பிரபல்யப்படுத்தியது பெருந்தோட்ட மக்கள் தான். ஆனால் சொந்த நாட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் இல்லை. பெருந்தோட்டங்களில் வாழும் மக்களுக்கு வீடமைப்பதற்கு என்று குறைந்தபட்சம் 10 பேர்ச் காணி வழங்கப்பட வேண்டும். அதுபோல பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட காணி உரிமையாளர்கள் ஆக்குவதற்கு குறைந்தபட்சம் 2 ஏக்கர் காணி வழங்கப்பட வேண்டும். இதுதான் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு விமோசனத்தை அளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *