இந்தியாவின் புகழ்பெற்ற தலமான திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் இந்தியாவின் பல நகரங்களில் மாத்திரமல்லாமல், உலகளாவிய ரீதியில் பல நாடுகளிலும், திருப்பதி ஏழுமலையானுக்கு கோவில் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன் ஓர் அங்கமாக இலங்கையில் சிலாபம் – முன்னேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கப்பட்டு, விரைவில் மஹாகும்பாபிஷேக விழாவுடன் திறக்கப்பட உள்ளது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியாவின் திருமலை திருப்பதி தேவஸ்தான பிரமுகர்கள் உள்ளடங்கலான குழுவினர் நேற்றைய தினம் (19) சிலாபம் – முன்னேஸ்வரம் ஆலயத்திற்குரிய இடத்தை சென்று பார்வையிட்டார்கள். மிக விரைவில் ஆலயத்திற்கு உரிய பூமி பூஜை இடுவதற்கு திருவருள் கூடும் என அவர்கள் கருத்து தெரிவித்தார்கள்…
அத்துடன், இலங்கையிலுள்ள ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளை இந்தியா தமிழ்நாட்டைச் சேர்ந்த T.S.T அறக்கட்டளை மற்றும் சாயி சமர்ப்பணம் அறக்கட்டளை ஆகியன இணைந்து மேற்கொண்டு வருவதாக T.S.T அறக்கட்டளையின் பிரதானி கா.சசிகுமார் தெரிவித்தார்.
இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
இந் நிகழ்வில் சாயி சமர்ப்பணம் அறக்கட்டளை பிரதானி ஜெகத் ராம்ஜி மற்றும் பி.செல்வராஜ் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் இலங்கை- இந்திய நல்லுறவை ஏற்படுத்துவதற்கு இந்தியாவின் திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியுடன் புத்தளம் முனீஸ்வர ஆலயத்திற்கு அருகில் வெங்கடா ஜலபதி ஆலயம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் பூமி பூஜை நடாத்தவுள்ளதாகவும் விரைவாக ஆலயத்தை அமைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



