இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனத்தால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மகஜர்…! samugammedia

இரணைமடு கமக்காரர் அரும்புக்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை இன்று கையளித்துள்ளனர்.

தமக்கு ஏற்பட்டுள்ள நட்டத்திற்கு இழப்பீடு வழங்க கோரியே இன்று கையளித்தனர்.

இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு சென்ற விவசாயிகள் ஜனாதிபதிக்கான மகஜரை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்தனர்.

2023 மற்றும் 2024 ம் ஆண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் 72 ஆயிரம் ஏக்கர் கால போக செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் அதிக மழை மற்றும் நோய்த்தாக்கம் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 1.5 மெற்றிக் தொண் அறுவடை செய்திருந்தோம். ஆனால் இம்முறை 0.5 மெற்றிக் தொண் மாத்திரமே அறுவடை செய்ய முடிந்துள்ளது.

இதேவேளை செய்கைக்காக ஏக்கர் நன்றுக்கு 130,000 ரூபா செலவிடப்பட்டது.

ஆனால் 15 ரூபாவையும் பெறமுடியாத நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு 115,000 ரூபா நட்டத்தை அடைந்துள்ளோம்.

எமது நிலையை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டில் செய்கை மேற்கொள்ளும் வகையில் நட்ட ஈட்டினை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுத்து உதவுமாறு குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகஜர் கையளிக்கப்பட்ட பின்னர், நெல்லுக்காண நிர்ணய விலை இல்லாமையால் தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அதிபரிடம் தெரிவித்தனர்.

குறித்த மகஜரின் பிரதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கிடைக்கும் வகையில் அவரது இணைப்பாளரிடமும் கையளிக்கப்பட்டது.

குறித்த மகஜர் ஜனாதிபதிக்கு உடன் அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *