பதவி திருகோணமலைக்கா ? மட்டக்களப்பிற்கா? – தீர்வின்றி முடிந்த தமிழரசுக் கட்சியின் இரகசிய கலந்துரையாடல்..!samugammedia

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவு தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் 

தீர்மானம் எட்டுவதற்காக வவுனியாவில் இடம்பெற்ற இரகசிய கலந்துரையாடலும் முடிவு எட்டப்படாத நிலையில் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வரும் சர்ச்சைக்கு தீர்வு காணும் முகமாக தற்போதைய பதில் பொதுச் செயலாளர் ப.சத்தியலிங்கம் தலைமையில் வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றையதினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறிதரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், மற்றும் 

செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட இரு அணிகளையும் சேர்ந்த ச.குகதாசன், ஞா.சிறிநேசன், கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இதன்போது திருகோணமலையைச் சேர்ந்த குகதாசனும், மட்டக்களப்பைச் சேர்ந்த சிறிநேசனும் பொதுச் செயலாளர் பதவியை ஒவ்வொரு வருடமாக பகிர்ந்து கொள்வது தொடர்பில் பேசப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அறிய முடிகின்றது.

எனினும் முதலில் யார் ஒரு வருடம் பதவி வகிப்பது என்பது தொர்பில் இருவருக்கும் இடையில் இணக்கப்பாடு இன்றி முரண்பாடுகள் ஏற்பட்ட நிலையில் முடிவுகள் எட்டப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் ” பொதுச் செயலாளர் பதவியை குகதாசன் மற்றும் சிறிநேசன் ஆகியோருக்கு இரண்டு வருடங்கள் என்ற அடிப்படையில் 

பகிர்ந்தளிக்கும் நோக்குடன் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றோம். நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முதல் வருடத்தை யாருக்கு வழங்குவது என்பதில் தான் இழுபறி நிலை உள்ளது.

முதல் வருடத்தை மட்டக்களப்பிற்கு தருமாறு கோரியிருந்தோம் ஆனால் முதல் வருடத்தை திருகோணமலைக் தருமாறு குகதாசன் கோரியுள்ளார் ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply