பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – கொழும்பில் பதற்ற நிலை

கொழும்பில்  உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக இன்று(22) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு வந்த பதாகைகளை ஒட்ட முயன்றதை அடுத்து குறித்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷில் (Bangladesh) உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைகளில் 30 வீத இடஒதுக்கீடு வழங்க அந்த நாட்டு அரசாங்கம் மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது.

இந்த போராட்டம் காரணமாக அந்நாட்டில் இதுவரை 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், இரண்டாயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.

இந்த நிலையில், மாணவர்களுக்கு எதிரான பங்களாதேஷ் அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து கொழும்பில் உள்ள பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரலாயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொடூரமான முறையில் பங்களாதேஷில் மாணவர்கள் கொல்லப்படுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென அவர்கள் கோரியுள்ளனர்.

இலங்கையில் உள்ள குடிசார் சமூகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், அனைத்து பல்கலைக்கழக மாணவரை் ஒன்றியத்தினர், ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின், தொழிற்சங்கத்தினர் மற்றும் குடிசார் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரரங்கள் கொண்டு வந்த பதாகைகளை கொழும்பில் உள்ள பங்களாஷே் உயர்ஸ்தானிகரலாயத்தின் மதில்களில் ஒட்ட முயன்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களின் இந்த நடவடிக்கையை குறித்த பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடுக்க முயன்றதையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *