சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் நான்கு சந்தேக நபர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரமோட்டை ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மணல் அகழ்வில் ஈடுபட்ட மூன்று உழவியந்திரங்களுடன் நான்கு சந்தேக நபர்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்து இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.