கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மறைவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இரங்கல்!

  

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த,  இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது என நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த கட்சியின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நவ சமசமாஜ கட்சியின் தலைவராக  தனது 81ம் வயதில் காலமான அவர்,  தமிழ் மக்களது சுய நிர்ணய அடிப்படையிலான ஒரு நியாயமான தீர்வு கிடைப்பதற்கு விசுவாசமாகவும் நேர்மையாகவும் குரல் கொடுத்து வந்த ஒருவர். 

எங்களுடைய செயலதிபர் உமாமகேஸ்வரனுடனும் பிற்பாடு என்னுடனும்  மிகவும் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்த அவர், தனது இறுதிக் காலம் வரையிலும் அவ் உறவுகளை பேணி வந்தார்.

தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனவர்கள் தொடர்பான விசாரணைகள், இராணுவத்தின் வசமிருக்கும் நிலங்களை உரிமையாளர்களுக்கு மீள கையளித்தல் போன்ற விடயங்களுக்காக உள்நாட்டிலும் நாட்டிக்கு வெளியிலும் மிக தீவிரமாக குரல் கொடுத்து வந்தார். 

தமிழ் மக்களின் நேர்மையான பெரும்பான்மை இன  நண்பர்கள் எனும் பட்டியலில் அமரர் தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு என்றென்றும் தனித்துவமான இடம் இருக்கும். 

இவருடைய இழப்பு இலங்கையில் இருக்கும்  இடதுசாரிகளுக்கு மட்டும் அல்ல தங்களின் அடிப்படை உரிமையை கோரி நின்று போராடுகின்ற ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *