படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை, சேருநுவர – தங்கநகர் யுவதியின் கொலைமீதான வழக்கு விசாரணை மூதூர் நீதிமன்ற நீதிபதி திருமதி தஸ்னீம் முகமட் பௌசான் முன்னிலையில் விசாரணைக்காக இன்றையதினம் (16) எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் சகோதரியான 7ஆம் எதிராளி மற்றும் 4ஆம் எதிராளிகளுக்கு பிணை வழங்கியும், ஏனைய 5 சந்தேகநபர்களுக்கு விளக்கமறியலை நீடித்தும் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கானது இன்றைய தினம் (16) மூன்றாவது தடவையாக மூதூர் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது எதிரிகள் சார்பில் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிபதி, குறித்த தரப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான காதலனின் சகோதரியான 7ஆம் எதிராளியையும், ஜே.சி.பி இயந்திரத்தின் தரகரான 4ஆம் எதிராளியையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டதோடு ஏனைய 5 பேரையும் விசாரணைக்கு உட்படுத்தும் முகமாக விளக்கமறியலை நீடித்தும் கட்டளை பிறப்பித்திருந்தார்.
சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தைச் சேர்ந்த நடேஸ்குமார் வினோதினி (வயது 25) என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டு கிளிவெட்டி கிராமத்தின் ஒதுக்குப்புறமாகவுள்ள கிணறு ஒன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த யூலை மாதம் 5ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபரான யுவதியின் காதலன் உட்பட சந்தேகத்தின்பேரில் 7பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையிலேயே இன்றைய தினம் (16) இருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கானது கடந்த 19.07.2024 அன்று வழக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கு தொடுனரான மூதூர் பொலிசார் நான்கு எதிரிகளை குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யுமாறு கோரியிருந்த நிலையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணங்களையும், வழக்கு விசாரணைகளையும் ஆராய்ந்ததோடு குறி;த்த வழக்கில் பொலிசாருடைய விசாரணையில் திருப்தி அடையாத நீதிபதி குறித்த வழக்கை திருகோணமலை மாவட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு மாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.





