யாழில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுடனான கலந்துரையாடல்!

சனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்களுடனான கலந்துரையாடல்   யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இன்றைய தினம்   காலை 9.00 மணிக்கு நடைபெற்றது.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 4 ந் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும், இவ் தபால் மூல வாக்களிப்புக் கடமைக்காக நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்கள் தபால் மூல வாக்களிப்பினை ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தி தேர்தல் கடமைகளை ஒருங்கிணைத்து தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற  ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். 

இதன் போது சனாதிபதி தேர்தலில் தபால் மூல  அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் . இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது. 


இக் கலந்துரையாடலில்   திணைக்களத் தலைவர்களால் நியமிக்கப்பட்ட அத்தாட்சிப்படுத்தும்  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply