வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுர மன்னிப்பு கோர வேண்டும்- யாழில் ரணில் தெரிவிப்பு..!

வாக்குகளைப் பெறுவதற்காக வடக்கு மக்களை அச்சுறுத்திய அநுரகுமார திஸாநாயக்க அந்த மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி வடக்கு மக்களை அச்சுறுத்தியமைக்காக தென்பகுதி மக்களிடமும் அநுரகுமார மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் இன்றையதினம்(07) மாலை இடம்பெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும் என்பதுடன் மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

விவசாயத் துறையைப் பலப்படுத்தி வரும் நிலையில், வடக்கில் விவசாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வடக்கில் காங்கேசன்துறை, பூநகரி, மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்கவிருப்பதுடன் வடக்கில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்கவிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்த முடியும் என இரண்டு வருடங்களுக்கு முன்னர் யாரும் நம்பியிருக்கவில்லை. அனைத்திற்கும் வரிசை இருந்தது. நாட்டில் ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தியுள்ளேன். 

அந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தக் கூடியதாக உள்ளது. இயலும் ஶ்ரீலங்கா எண்ணக் கருவை முன்னெடுத்து வருகின்றேன்.

சஜித்தும் அநுரவும் பொறுப்புக்களை ஏற்க முன்வரவில்லை. அவர்கள் இருந்தால் தேர்தலை நடத்தியிருக்க முடியுமா? கூட்டங்களில் பேச முன்னர் அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இன்னும் பிரச்சினைகளும், சிரமங்களும் உள்ளன. ஆனால் எதிர்பார்ப்பு பற்றிய எதிர்பார்ப்பு உள்ளது. அந்த எதிர்பார்ப்பைப் பாதுகாக்கவே நான் போட்டியிடுகின்றேன்.

கடந்த காலத்தில் எமது கடன் சுமை அதிகரித்திருந்தது. கடன் பெறுவதை நிறுத்தினோம். கடன் பெறுவதை நிறுத்தியதால் வரிகளை அதிகரிக்க நேரிட்டது.  

பண வீக்கம் அதிகரித்திருந்தது. இருவேளை சாப்பிடுவது கூட கஷ்டமாக இருந்தது.

தற்போது பொருளாதரம் பலமடைந்துள்ளது. அஸ்வெசும திட்டத்தின் கீழ் 24 இலட்சம் பேருக்கு வழங்கி இருக்கின்றோம். இன்னும் 5 இலட்சம் பேருக்கு அஸ்வெசும வழங்கப்பட வேண்டும். 

சம்பள உயர்வு வழங்கியுள்ளதோடு ஓய்வூதியங்களையும் அதிகரித்துள்ளோம். பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாலே அவற்றைச் செய்ய முடிந்தது. பொருட்களின் விலைகளும் குறைந்துள்ளன. மேலும், நிவாரணங்கள் வழங்க வேண்டும்.

பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகின்றன. வாழ்க்கைச் செலவு இன்னும் அதிகமாக இருக்கின்றது. அதனால் ரூபாவின் பெறுமதியைப் பலப்படுத்தி வாழ்க்கைச் செலவைக் குறைக்க வேண்டும். ரூபாவின் பெறுமதி வலுவடையும்போது இன்னும் சலுகைகளை வழங்கலாம். 

அடுத்த வருடம் மேலும் சலுகைகள் வழங்குவேன். வரியை குறைத்து, சலுகைகள் வழங்க முடியாது. 2019 இல் கோட்டாபய வரியைக் குறைத்தார். நாட்டின் வருமானம் குறைந்தது.

2022 இல் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. பெண்களுக்காக தனியான விஞ்ஞாபனத்தைச் சமர்ப்பித்துள்ளேன். அவர்களை வலுவூட்ட சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களிலும் தனியான பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மக்களுக்கும் உறுமய காணி உறுதி பெற்றுக்கொடுக்கப்படும். அடுத்த வருடம் மேலும் வாழ்க்கைச் செலவைக் குறைப்போம். உற்பத்தி அதிகரிக்கும்போது அனைவரிடமும் வரி அறவிடப்படும். அத்தோடு தற்போது வரி செலுத்துவோரின் வரிச்சுமை குறையும்.

விவசாயத்துறையைப் பலப்படுத்தி வருகின்றோம்.  வடக்கு விவசாயத்துக்கு முக்கியமானது. டிஜிட்டல் பொருளாதாரத்தை ஏற்படுத்த இருக்கின்றோம். 

வடக்கில் காங்கேசன்துறை, பூநகரி, மாங்குளத்தில் விசேட வர்த்தக வலயம் ஆரம்பிக்க இருக்கின்றோம். இந்தப் பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கின்றோம். டிஜிட்டல் மத்திய நிலையமொன்றை ஆரம்பிக்க இருக்கின்றோம். 

இவற்றை அரசினால் தனியாக மேற்கொள்ள முடியாது.

9 மாகாண சபைகளுக்கும் அரசுடன் பணியாற்றுவதற்காக மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.

வடக்கு மக்களை அநுரகுமார அச்சுறுத்துகின்றார். மாற்றத்துக்காகத் தெற்கு மக்கள் தயாராகியிருக்கையில் அந்த மாற்றத்துக்கு எதிராகச் செயற்பட்டால் எவ்வாறான மனநிலை தெற்கில் ஏற்படும் என்கிறார். 

அவரது வெற்றியின் பங்காளர்களாக வர வேண்டும் என்கின்றார். தனக்கு வாக்களிக்காவிட்டால் பார்த்துக்கொள்வோம் என அநுரகுமார எச்சரித்தார். அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

2010  ஜனாதிபதித் தேர்தலின்போது இங்கு வந்து சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்கக் கோரினோம். வடக்கு மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தனர். தெற்கு மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். மஹிந்த ராஜபக்‌ஷ வென்றார். உங்களை யாராவது தாக்கினார்களா?

2015 இல் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்கக் கோரினோம். தென் பகுதி மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வாக்களித்தனர். நாம் வென்றோம். ஏதாவது நடந்ததா? 2019 இல் வடக்கு மக்கள் சஜித் பிரேமதாஸவுக்கு வாக்களித்தார்கள். தெற்கில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். கோட்டாபய இராணுவத்தை அழைத்து வந்தாரா? தேர்தல் முடிவுகளை மக்கள் அங்கீகரித்தனர். 

அநுரகுமார எப்படி மக்களை அச்சுறுத்த முடியும்? வடக்கு மக்களை மட்டுமன்றி தெற்கு மக்களையும் அவர் அச்சுறுத்துகின்றார். அதுதான் அவர்களின் போக்கு.

அநுர வெற்றி பெற மாட்டார். முன்பு துண்டுப் பிரசுரம் பகிர்ந்தார். வடக்கு மக்களிடம் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். தென்பகுதியில் உள்ள சிங்கள மக்களின் பெயரைப் பயன்படுத்தி அச்சுறுத்தியதற்காக தென்பகுதி மக்களிடமும் அநுர மன்னிப்புக் கோர வேண்டும். பின்னர் அவர் எதிர்க்கட்சிக்கு வரலாம். 

அவருக்கு யாழ்ப்பாணத்திற்கு வர முடியாது போகும். நாம் முன்னர் அவர்களுக்கு அஞ்சவும் இல்லை. இப்போது அஞ்சவும் இல்லை. சஜித் பற்றி பேசிப் பயனில்லை. எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை அவர் செய்திருந்தால் அநுர முன்னேறி வந்திருக்கமாட்டார்.  அவருக்கு அளிக்கும் வாக்குகள் பயனற்றதாகும். எமது நாட்டை முன்னேற்ற வேண்டும். எனவே, காஸ் சிலிண்டருக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.

வட பகுதி மக்கள் பிரதிநிதிகள், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் பங்கேற்ற இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, அமைச்சர் சிறிபால டி சில்வா, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோரும் உரையாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *