நாட்டில் எட்டு திக்கிலும் ரணில் ஆதரவு அலை! – பரப்புரையில் வேலுகுமார் எம்.பி. பெருமிதம்

நாட்டில் எட்டு திக்கிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கான ஆதரவு அலை வீசுகின்றது. எனவேஇ அவரின் வெற்றியைத் தடுக்க முடியாது என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் பெறுகின்றது என்பது தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் பிரசாரக் கூட்டம் கம்பளையில் நேற்று நடைபெற்றது.

இதன்போது அவர் மேலும் கூறியதாவது:-

நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு தற்போது இயல்பு நிலையை நோக்கிப்  பயணித்துக்கொண்டிருக்கின்றது. வியாபாரிகளுக்குத் தமது வியாபாரங்களைச் சுதந்திரமாகச் செய்ய முடிகின்றது. முயற்சியாளர்களுக்கு தமது தொழிலை வெற்றிகரமாகச் செயற்படுத்த முடிகின்றது.

எரிபொருள் நெருக்கடி இல்லை, மின்வெட்டு இல்லை, பாடசாலைகள் மூடப்படவில்லை. எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவமே இதற்குக் காரணம்.

உலகில் பொருளாதார ரீதியில் வங்குரோத்தடைந்த நாடொன்று குறுகிய காலப்பகுதிக்குள் மீண்டெழவில்லை. இது எப்படி சாத்தியமென பல நாடுகளும் ஆராய்கின்றன. 

இந்தப் பொருளாதார அதிசயத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நிகழ்த்தியுள்ளார். அவரின் இந்தப் பயணம் தடைப்பட்டால் நாடு மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கியே செல்லும்.

அதிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகவே ஜனாதிபதியின் வெற்றியில் பங்காளியாக நாமும், மக்கள் பக்கம் நின்று இணைந்துள்ளோம்.

இது பரீட்சயம் பார்ப்பதற்குரிய நேரம் அல்ல, அக்கினிப்பரீட்சையாகும். சிறு தவறு இழைந்தால்கூட எமது தலைவிதி நாசமாகிவிடும் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *