15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் அநுரகுமாரவால் பெற முடியாது!- ஆளுங்கட்சி எம்.பி. கணிப்பு

ஜே.வி.பி. இரண்டு முறைகள் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத அமைப்பு என்றும், அந்தக் கட்சியினர் ஓரளவு வளர்ச்சியைக் காட்டினாலும் அவர்களின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 10 – 15 இலட்சம் வாக்குகளுக்கு மேல் பெற மாட்டார் என்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பிரேமநாத் சி.தொலவத்த தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகக் களமிறங்கியுள்ள தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியானது என்றும், 

இந்த நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காமல் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் பங்குகொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு, பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே பிரேமநாத் சி. தொலவத்த எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிடம் 28 இலட்சம் வாக்குகளே உள்ளன. அவரது மொத்த வாக்குகள் 55 இலட்சம் என்று யாராவது நினைத்தால், அவர்கள் தங்கள் கணித அறிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 

சஜித் பிரேமதாஸ 28 இலட்சத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற முடியாது. எனவே, எங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றி உறுதியான வெற்றி என்றே கூற வேண்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *