அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தின் காரணமாகவே நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு நட்பு நாடுகள் ஆதரவு- ஜனாதிபதி ரணில் பெருமிதம்..!

இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த வேலைத் திட்டத்தின் காரணமாக, நாட்டை முன்னோக்கி நகர்த்தும் பயணத்திற்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட அனைத்து நட்பு நாடுகளினதும் ஆதரவும் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கந்தளாய் புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (16) காலை நடைபெற்ற ‘ரணிலால் இயலும்’ வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மக்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீளப் புனரமைத்தல், கைத்தொழில் வலயம் அமைத்தல் மற்றும் வெருகல் பாலத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதாக ஜனாதிபதி அறிவித்தார்.

பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்,

இன்று தேசப்பற்றை பற்றி பேசும் சஜித்தும் அநுரவும் கடந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்களை கைவிட்டு ஓடிவிட்டனர். இரண்டு வருடங்களின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இன்று 38 பேர் நாட்டை மீட்க போராடி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

”2005 தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எதிராக போட்டியிட்டேன். வடக்கு மக்கள் வாக்களிக்காதால் தோற்றேன். அடுத்த தேர்தலில் சந்திரிகாவுடன் போட்டியிட்டேன். 2016 இல் பிரதமராக ஐ.எம்.எப் உடன் பேசினேன். வரியைக் குறைத்தால் IMF உதவி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. 2019 இல் நான் போட்டியிடவில்லை. கோட்டாபயவுடன் சஜித் பிரேமதாஸ போட்டியிட்டார். வரியைக் குறைக்க வேண்டாம் என்று அன்று கோரினேன். ஆனால், கேட்டாபய ஆட்சிக்கு வந்த பின் வரியைக் குறைத்தார். சர்வதேச நாணய நிதியம் உதவி வழங்குவதை நிறுத்தியது.

பொருளாதாரம் வீழ்ந்தது. வரிசையில் நீங்கள் கஷ்டப்பட்டது போதும். பிரதமர் பதவி பொறுப்பேற்கக் கேட்டு பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டது. இது கின்னஸ் சாதனையாகும். அவர்களின் நாட்டின் மீதான தேசப்பற்றும் உங்கள் மீதான அர்ப்பணிப்பும் அவ்வளவு தான்.

ஆட்சியை முன்னெடுக்க மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழு எனக்கு உதவியது. அதற்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர்களின் உதவியுடன் தான் திட்டங்களை முன்னெடுத்தேன். வஜிர அபேவர்தன எம்.பி ஆதரவு வழங்கினார். ஏனைய கட்சிகளின் ஆதரவும் கிடைத்தது.

சமையலறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து சிந்தித்தே அநேகமான விடயங்களை மேற்கொண்டேன். 2025 இல் சமையலறை யுத்தத்தை நிறைவு செய்வேன். இவ்வாறு வீழ்ந்த நாடுகள் எழுச்சி பெற பல வருடங்கள் பிடித்தன. அரச ஊழியர்கள் வேலை நீக்கப்பட்டனர். சம்பளம் குறைக்கப்பட்டது. ஆனால் நான் அதில் எதனையும் செய்யவில்லை. ஸ்தீரநிலை ஏற்பட்டாலும் மீண்டும் சரிவு ஏற்படலாம். உறுதியான நிலையை ஏற்படுத்தவே 5 வருட காலம் கோருகிறேன்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை. அந்தத் திட்டத்தைப் பாதுகாத்து முன்னேற வேண்டும். அதனால் தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்கள் ஆணையை கோருகிறேன்.

போட்டி நிறைந்த ஏற்றுமதி பொருளாதாரத்தை மேற்கொண்டு பணம் சம்பாதிக்க வேண்டும். அதற்காக விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். இப்பகுதியில் துரியன் சாகுபடி செய்ய வேண்டும். துரியன் பழங்களை எடுத்து சீனாவுக்கு அனுப்பலாம். துரியன் ஏற்றுமதி மூலம் தாய்லாந்து 1,000 மில்லியன் டொலர்களைச் சம்பாதிக்கிறது. அடுத்த 05 வருடங்களில் கந்தளாய் பிரதேசத்தை விவசாய பிரதேசமாக அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

மேலும், திருகோணமலை துறைமுகம் இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யப்படுகிறது. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை திருகோணமலைக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது. சம்பூர் சூரிய சக்தி பிரதேசமாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. சுற்றுலாத் துறையும் மேம்படுத்தப்படும். இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை அபிவிருத்தி செய்ய இருக்கிறோம். கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப நாம் ஆரம்பித்த வேலைத் திட்டத்தின் காரணமாக ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இந்தப் பயணத்தை நாம் தொடர வேண்டும்.

எனவே, சமையலறை பிரச்சனையைத் தீர்க்க அனைவரும் கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *