நாடாளுமன்றம் எந்நேரத்திலும் கலைக்கப்படும்!

புதிய ஜனாதிபதியாக இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்ற அநுரகுமார திஸாநாயக்க இன்றிரவு அல்லது நாளை – எந்நேரத்திலும் – நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்குத் தயாராகி விட்டார் என விடயம் அறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன.

இது தொடர்பில் சட்டமா அதிபரிடமும் பிற சட்டத்துறை வட்டாரங்களிடமும் இன்று பகல் அவர் சட்ட ஆலோசனை பெற்றார் என்றும் நம்பகமாக அறியவந்தது.

நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதாயின் பொதுத் தேர்தலுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதற்காக நாடாளுமன்றத்தை ஒரு தடவை கூட்ட வேண்டும் என்றும் சில தரப்புகள் தெரிவித்தனவாயினும், அது சட்டப்படி தேவையற்ற விடயம் என இப்போது ஜனாதிபதிக்கு உரிய தரப்புகள் சட்ட ஆலோசனை வழங்கியிருக்கின்றன எனத் தெரிகின்றது.

அரசமைப்பின் 150 ஆவது பிரிவின் கீழ் இத்தகைய சட்ட ஒதுக்கீட்டை நேரடியாக வழங்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்பது அவருக்குச்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தக் கட்டத்தில் தற்போதைய நாடாளுமன்றத்தை அவர் கூட்டுவது, நாடாளுமன்றப் பெரும்பான்மை இல்லாத நிலையில் அவர் நிறுவக்கூடிய அரசைத் தோற்கடிக்கச் செய்யும் வாய்ப்பைத் தரும் என்பதால் தற்போதைய நாடாளுமன்றத்தைக் கூட்டாமலேயே முற்கூட்டியே அதைக் கலைத்து விடும் ஆலோசனை ஜனாதிபதிக்கு சட்ட வட்டாரங்களினால் வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிகின்றது.

அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமையால் நாடாளுமன்றத்தில் அவரது இடத்துக்கு புதிதாக நியமிக்கப்படும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரின் பெயர் வர்த்தமானியில் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த அறிவிப்பு வந்ததும் வெளியில் ஒரு சமாதான நீதிவான் முன்னிலையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினராகச் சத்தியப் பிரமாணம் செய்ததும் நாடாளுமன்றக் கலைப்பை ஜனாதிபதி முன்னெடுப்பார் எனத் தெரிகின்றது.

அது பெரும்பாலும் இன்றிரவு அல்லது நாளை இடம்பெறும் எனச் சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் குறிப்பிட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *