தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்கிறது – ச.கீதன் தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை பரிசீலனை செய்வதாக தமிழ்த் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச்செயலாளர் ச.கீதன்  ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கையில், 

2024 ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவாகியதன் பிற்பாடு புதிய அரசியல் கலாசாரத்திற்குள் தென்னிலங்கை செல்வதனை காணக்கூடியதாக இருக்கிறது. 

இந்நிலையில் தமிழர்கள் அதற்கு ஏற்ற வகையில் அதற்கு ஈடு கொடுக்கக்கூடிய வகையில் தமது அரசியல் தந்திரோபாயங்கள் மூலமாக தமிழர்களின் நீண்டகால அபிலாசைகளை நிறைவு செய்து கொள்ளக்கூடிய வழிமுறைகளை ஒற்றுமையுடன் கையாள வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதை  தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை உணர்ந்து கொள்கிறது. 

இவ்வாறான நிலையில் தமிழர்கள் ஒரே அணியில் சாத்தியமான வழிமுறைகளுக்கூடாக நகர வேண்டிய தேவை உள்ள அதே நிலையில் மாறிவரும் சூழலுக்கு ஏற்ற வகையில் இளைஞர்களின் வகிபாகத்தை அரசியலில் உறுதிப்படுத்தி தொடர்ந்து வரும் ஜனநாயக வெளிகளை கையாள்வதற்கு இளைஞர்களை பலப்படுத்த வேண்டிய தேவையினையும் தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை நன்கு உணர்ந்து இருக்கிறது. 

இந்த முக்கியமான காலப்பகுதியில் இலங்கைத் தமிழரசு கட்சியின் நேற்றைய மத்திய குழு கூட்டத்தில் வெவ்வேறு காரணங்களுக்காக பிரிந்து சென்றிருக்க கூடிய அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைக்கும் வகையில் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு அறிவித்திருப்பதை நாம் வரவேற்கிறோம். 

அந்த  வகையில் ஆளுமையுள்ள, ஊழலுக்கு எதிரான தமிழ்த் தேசிய சிந்தனையுடன் இளைஞர்களுக்கான சரியான வகிபாகங்களை வழங்கி புதிய அரசியல் வியூகங்களை வகுத்து செயற்பட தமிழரசு கட்சி தயாராக இருக்குமாக இருந்தால் அதன் ஒற்றுமைக்கான அழைப்பை தமிழ்த் தேசிய இளைஞர் பேரவை சாதகமாக பரிசீலிக்க தயாராகவள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *