யாழ் மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு…!

யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல்  கருத்தரங்கு நிகழ்வானது  யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்  தலைமையில் இன்றைய தினம் காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இவ்  பயிற்சிக் கருத்தரங்கில் கருத்து தெரிவித்த மாவட்ட செயலாளர் ,

எங்களுடைய மாவட்டத்தினை பொறுத்தவரை பல மதங்களைச் சேர்ந்த பல்லின மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாவட்டமாக காணப்படுகின்றது.

இஸ்லாமியர்கள் அஹதிய்யா பாடசாலைகள் மூலமாகவும் இந்துக்கள் அறநெறி பாடசாலைகள் ஊடாகவும்   அதேபோன்று பெளத்தர்களும் கிறிஸ்தவவர்களும் தங்களுடைய மார்க்க நெறிமுறைகளுக்கூடாக  மாணவர்களை ஆற்றுப்படுத்துகின்ற அல்லது நல்வழிப்படுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இத்தகைய அஹதிய்யா பாடசாலைகள்   யாழ்ப்பாண மாவட்டத்தில்  இயங்கி வருவது மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்தார்.

மேலும் இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இளையோர் சமுதாயமும்  இளைஞர்களும்   முன்னேற வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதெனவும்  அச்சுறுத்துகின்ற பல விடயங்கள் உங்கள் பிள்ளைகளை சூழ்ந்திருக்கின்ற போதிலும் பிள்ளைகளை நல்லொழுக்கம் சார்ந்து வளர்த்தெடுப்பதற்கும் ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும்  இத்தகைய அஹதிய்யா போன்ற செயற்பாடுகள் உறுதுணையாக இருப்பதாகவும் இத்தகைய செயற்பாடுகளினை மேற்கொள்பவர்களுக்கு தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து அஹதிய்யா பாடசாலையின் முக்கியத்துவங்கள்,   போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவூட்டல்களும் மாணவர்களுக்கு  வழங்கப்பட்டிருந்தன.

இக் கருத்தமர்வில்   முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின்  பிரிவு பொறுப்பாளர் A.S.M.ஜாவித் , இக்ரஃ அஹதிய்யா பாடசாலையின்  தலைவர். B.A.S.சுப்யான் மெளலவி, சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.V.தர்மினி (நீதவான் நீதிமன்ற வளாகம்- யாழ்ப்பாணம்), முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்    S.M.நிஸ்தாக், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர்  M.இல்ஹாம், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் M.ஹபீல்,  இக்ரஃ அஹதிய்யா பாடசாலையில் கல்வி கற்கும் கதீஜா மகா வித்யாலயம் மற்றும் ஒஸ்மானிய்யா கல்லூரியை சேர்ந்த   50  மாணவர்கள்,  ஆசிரியர்கள்  , பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *