புதிய வீதிகளை அசிங்கப்படுத்தி விபத்து ஏற்படுத்திய ஈபிடிபி! நடவடிக்கை எடுக்குமா அரசு?

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில்  யாழ் தீவுப்பகுதியின் பெரும்பாலான  வீதிகளில், சந்திகளில்  திடுதிடுப்பென்று  வெள்ளை நிறத்திலான வர்ணப்பூச்சுக்களால ஈபிடிபி என்று எழுதப்பட்டு வீணை சின்னம் வரையப்பட்டுள்ளன. 

இவற்றில் பல வீதிகளின்  புனரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில்  பாதசாரிகள் கடவை போன்ற  தோற்றத்தை  ஏற்படுத்தக்கூடிய  இவ்வாறான  தேர்தல் சின்னங்கள்  திடீரென்று  வெளிப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகளும், வாகன சாரதிகளும்  இடையூறுகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. 

சில தினங்களுக்கு முன்னர் வேலணை –  குறிகாட்டுவான் வீதியில் முதியவர் ஒருவர்  பாதசாரி கடவை (வெள்ளைக்கோடு)  என்று எண்ணியவாறு திடீரென  வீதியை கடக்க முற்பட்டபோது  அவ்வீதியால் பயணித்த வாகனம் ஒன்று  குடைசாய்ந்த  அவலம் ஏற்பட்டுள்ளது. 

ஏனெனில்  அப்பகுதியில் பாதசாரிக்கடவை  இல்லாத நிலையில் வெள்ளை நிறத்திலான வீணை சின்னத்தை  கடவையாக எண்ணி அப்பொதுமகன் எதிர்பாராதவிதமாக   கடக்க முற்பட்டதால்  வாகன சாரதி செய்வதறியாது  வேகமாக வாகனத்தை ஓரங்கட்ட முயன்றபோது வாகனம் குடை சாய்ந்ததோடு  சாரதியும் காயங்களுக்குள்ளாகினார்.

சிங்கப்பூர்  போன்ற நாடுகளில்  இவ்வாறான அரச சொத்து துஷ்பிரயோகம், பொதுமக்களுக்கான  போக்குவரத்தில்  இடையூறு ஏற்படுத்துவது   போன்றவை  பாரிய குற்றச்சாட்டுக்களாக  கருதப்பட்டு  அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகின்றது. 

சிங்கப்பூர் பாணியிலான நல்லாட்சி முறைமையினை  ஏற்படுத்துவோமென்று கூறுகின்ற அநுர அரசாங்கமும், தேர்தல் திணைக்களமும்  இக்குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது  தொடர்பாக  பொதுமக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவதாகவும்  வீதிகளை  தவறான முறையில் பயன்படுத்திய  தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வதோடு அத்தரப்பினரை வைத்தே அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டுமென்றும்  தமிழ் அரசுக் கட்சியின் இளைஞரணி செயலாளர் கருணாகரன் குணாளன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply