தமிழரசுக்கட்சியானது ஒரு தேசியபட்டியல் ஆசனத்திற்காக திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இரு பிரதிநிதிகளை இழக்கும் நிலையினை ஏற்ப்படுத்தப்போவதாக ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் வவுனியாவில் இன்று இடம்பெற்றது. அதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்……
தமிழ்மக்களின் உரிமைகளுக்காக பொதுக்கட்டமைப்பானது தொடர்ந்தும் பணியாற்றும் என்பதை நாம் இருதரப்பும் ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். அந்தவகையில் இந்த பாராளுமன்றதேர்தலை ஜனநாயக தமிழ்தேசிய கூட்டமைப்பூடாக சங்கு சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான இறுதி முடிவுகள் விரைவில் அறிவிப்போம்.
நாங்கள் பிரிந்துநிப்பதால் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களின் இடங்களை இழந்துவிடும் நிலை இருக்கிறது. கடந்த முறை அம்பாறையில் அந்த இடத்தை இழந்திருக்கின்றோம். எனவே அங்கு தமிழ்பிரதிநிதுத்துவத்தினை காப்பாற்றுவதற்கான இரண்டு வழிமுறைகளை தமிழரசுக்கட்சிக்கு கூறியிருக்கின்றோம்.
இது தொடர்பில் தமிழரசுக்கட்சியின் முக்கிஸ்தர்களுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தோம். எனவே இருதரப்பும் இணைந்து வேட்பு மனுக்கள் தாக்கல்செய்யப்படும் போதே அந்த பிரதிநித்துவம் காப்பாற்றப்படும். எனவே ஏழாம் திகதிக்கு முன்னர் உத்தியோபூர்வமான பதிலை அறிவுக்குமாறு நாம் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
திருகோணமலையில் வீட்டுசின்னத்திலும், அம்பாறையில் சங்குசின்னத்திலும் தேர்தலை கேட்கலாம் என நாம் முன்னர் பேசியிருந்தோம். அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது அனைத்து இடங்களிலும் தமிழரசுகட்சி தனித்து போட்டியிடுவதாக கூறுகிறார்கள். அது நடந்தால் இந்த மாவட்டங்களின் ஆசனங்கள் இழக்கப்படும் நிலையே ஏற்படும்.
இந்த விடயங்களை ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஐந்துகட்சிகள் மற்றும். 36ற்கும் மேற்ப்பட்ட பொதுஅமைப்புக்கள் ஒன்றுகூடி இந்த முடிவிற்கு வந்துள்ளார்கள்.
மாறாக எல்லா இடத்திலும் தாங்களே நிற்கவேண்டும் என்றால் இது பிடிவாதமே. தங்களுக்கு தேசியபட்டியலை கூட்டிக்கொள்வதே அவர்களது நோக்கம். ஒரு தேசிய பட்டியலுக்காக இரண்டு ஆசனங்களை இழக்கபோகின்றார்கள். இதுபோல ஒரு முட்டாள்தனமா முடிவு எதுவும் இருக்காது.
இதேவேளை சுமந்திரனுக்கு எவளவு தூரம் வடகிழக்கு பிரச்சனைகள் புரியுமோ புரியாதோ என்று என்று எனக்கு தெரியாது. ஆனால் மாவை சேனாதிராயா, சிறிதரன் ஆகியோர் இதனை புரிந்துகொள்வர். என்றார்
.